கொழும்பு: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணி மீது இந்தியா இவ்வளவு தூரம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை சுக்கு நூறாக உடைத்து இந்திய ரசிகர்களால் கற்பனை கூட செய்திடாத வெற்றியை இந்திய படை பெற்றுள்ளது. 2000ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் அடைந்த மோசமான தோல்விக்கு, 23 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பழிதீர்த்ததாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கொண்டாடி வருகிறார்.

இதனிடையே ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்திய அணியால் இலங்கை அணியை எளிதாக வீழ்த்திட முடியாது என்று பாகிஸ்தான் அணியின் சோயப் அக்தர் விமர்சித்திருந்தார். அதற்கு இலங்கை அணியின் அண்மைக் கால செயல்பாடுகளும் முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் சோயப் அக்தரே வாயடைத்து போகும் அளவிற்கு இந்திய அணி இமாயல வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்திய அணியின் வெற்றி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்புயல் சோயப் அக்தர் பேசுகையில், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் ஒரு அணி மீது இன்னொரு அணி இவ்வளவு பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் என்று கற்பனை கூட செய்யவில்லை. ரோகித் சர்மாவின் கேப்டன்சி சிறந்த முன்னேற்றமடைந்துள்ளது. அவரும், இந்திய அணி நிர்வாகமும் தொடர்ந்து சிறந்த முடிவுகளை எடுத்துள்ளனர்.
இந்த வெற்றிக்கு பின் உலகக்கோப்பை தொடரில் மிகவும் அபாயகரமான அணியாக இந்தியா மாறியுள்ளது. அதேபோல் மற்ற ஆசிய அணிகளும் பலமாகவே உள்ளது. அதனால் யாரையும் பலம் குறைந்த அணி என்று குறைத்து மதிப்பிடவே முடியாது. ஆனால் இந்த வெற்றிக்கு பின் உலகக்கோப்பை தொடர் நெருங்கியுள்ள நிலையில், இந்திய அணியின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இந்திய அணியை அண்டர்டாக்ஸ் என்றே நினைத்திருந்தேன். இதுநாள் வரை பாகிஸ்தான் அணிக்கு மட்டுமே இந்திய அணி தலைவலியை கொடுக்கும் என்று நம்பினேன். ஆனால் இந்தியா தற்போது அனைத்து அணிகளுக்கும் தலைவலியாக மாறியுள்ளது. பேட்டிங், வேகப்பந்துவீச்சு, ஸ்பின்னர்கள், ஆல்ரவுண்டர்கள் என்று அனைத்து துறைகளிலும் இந்தியா வலிமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.