249 ரன்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின், முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி தான் டாஸ் போடப்பட்டு இப்போட்டி தொடங்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர். பிறகு, நேற்று நடந்த ஐந்தாவது நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கான்வே அதிகபட்சமாக 54 ரன்களும், வில்லியம்சன் 49 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஷமி 4, இஷாந்த் 3, அஷ்வின் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம், இந்தியாவை விட அந்த அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது.
மாற்று நாள் ஆட்டம்
இதைத் தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், ஷுப்மன் கில் 8 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரையும் டிம் சவுதி எல்பிடபிள்யூ செய்தார். நேற்றைய 5வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று (ஜூன்.23) மாற்று நாளில் போட்டி தொடங்கியது.
அதிரடி பேட்டிங்
இந்தியாவின் கைவசம் 8 விக்கெட்டுகள் இருந்ததால், அதிரடியாக விளையாடி லன்ச்சுக்கு முன்பாகவே டிக்ளேர் செய்ய வேண்டும் என்று விராட் கோலி ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளியானது. அதாவது, கிட்டத்தட்ட உணவு இடைவேளைக்கு முன்பாக விரைவாக ரன்களை சேர்த்து, 180 - 220 ரன்கள் இலக்காக நியூசிலாந்துக்கு தீர்மானிக்க கோலி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதாவது, புஜாரா, ரஹானே தவிர்த்து மீதமுள்ள அனைத்து பேட்ஸ்மேன்களையும் பேட்டை அதிரடியாக சுழற்ற அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டது.
ரிஷப் பண்ட்
இந்நிலையில், கேப்டன் கோலி மிக விரைவாக 13 ரன்களில், ஜேமிசன் ஓவரில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். அதேபோல், புஜாராவும் 15 ரன்களில் ஜேமிசன் பந்தில் வெளியேறினார். இதனால், இந்திய அணி தனது 4வது விக்கெட்டை இழந்துள்ளது. எனினும், கோலி அவுட்டாகி சென்ற பிறகு, லோ ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கால் வாசி வீரர்களை இழந்துவிட்டதால், இனி பொறுமையாக விளையாடி எந்த பயனும் இல்லை என்பதால், அதிரடியை கடைப்பிடிக்க தெரிவிக்கப்பட்டுள்ளதாம்