சென்னை: 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதை போலவே, இன்று விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்திலும் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 200 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ஆனால் முதல் ஓவரிலேயே இஷான் கிஷன் டக் அவுட்டாகி வெளியேற, அடுத்த ஓவரில் ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தனர். இதனால் ஒரு ஒய்டு மற்றும் லெக் பைஸ் ஆகிய 2 ரன்களின் உதவியால் இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலிய அணியிடம் ஏற்கனவே இந்தியா 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான வரலாறு உண்டு. அதேபோல் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி - நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.
அப்போது இந்திய அணியின் டாப் வீரர்களான கேஎல் ராகுல், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மூவரும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் இந்திய அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் இன்றைய போட்டியில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து விளையாடி வருகிறது.
இதனால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கும், இந்த உலகக்கோப்பை தொடருக்கும் எந்த வித்தியாசமும் இருக்க போவதில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் இந்திய அணி விளையாடிய கடைசி 2 உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் டாப் ஆர்டரின் பேட்டிங்கில் எந்த மாற்றமும் இல்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.