கொல்கத்தா: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரால், அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடும் ஆட்டத்தின் தேதி மாறுகிறது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடக்கிறது. அடுத்த சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 29 முதல் மே 19 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்க உள்ளது.
பிசிசிஐ நிர்வாகம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த லோதா கமிட்டி அளித்த பரிந்துரைகளின்படி, ஐபிஎல் போட்டிகளுக்கும், சர்வதேச போட்டிகளுக்கும் இடையில் 15 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். அதனால், உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டி தேதி மாற்றப்படுகிறது.
ஏற்கனவே திட்டமிட்டபடி, அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோத இருந்தது. தற்போது, அது ஜூன் 5ம் தேதிக்கு மாற்றப்படுகிறது. ஜூன் 16ல் பாகிஸ்தானை சந்திக்கிறது.
கொல்கத்தாவில் நடக்கும் ஐசிசி நிர்வாகக் குழு கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, இந்த மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கான கால அட்டவணை இம்மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது.