மும்பை : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.2022 டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.
அதன் பிறகு கடந்த 14 மாதங்களாக ரோகித் சர்மாவும் விராட் கோலியும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடாமல் இருந்தனர். இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது.

இதற்காக இந்திய அணி தயார் செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. இந்த தொடரில் பங்கேற்க ரோகித் சர்மாவும் விராட் கோலியும் ஆர்வம் காட்டியதால் ஆப்கானிஸ்தான் எதிரான டி20 தொடரில் இருவரும் களம் இறங்கினர். இந்த தொடரை இந்திய அணி மூன்றுக்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி டி20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 69 பந்துகளில் 121 ரன்கள் விளாசினார்.
இந்த நிலையில் செய்தியாளிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா 50 ஓவர் உலகக் கோப்பை தான் என்னை பொறுத்தவரை மிகப்பெரிய உலகக் கோப்பையாக இருந்தது. அதற்காக நாங்கள் டி20 உலக கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று அர்த்தம் கிடையாது. நான் குழந்தையிலிருந்து 50 ஓவர் உலகக் கோப்பையை பார்த்து வளர்ந்தவன்.
அது இந்தியாவில் நடைபெறுகிறது என்றால் அது நிச்சயமாக மிகப்பெரிய ஒரு தொடராக இருந்தது. நாங்கள் கடுமையாக முயற்சி செய்தோம். எனினும் எங்களால் அந்த உலகக்கோப்பை வெல்ல முடியவில்லை. ஒட்டுமொத்த அணியுமே சோகமாக தான் இருந்தது. ரசிகர்களும் சோகமாக தான் இருந்தார்கள்.
தற்போது எங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படி டி20 உலக கோப்பையில் வெல்ல வேண்டும் என்பதை நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இந்திய அணிக்காக விளையாடும்போது எந்த ஒரு உத்வேகமும் தேவையில்லை.எங்கள் வீரர்கள் அனைவருமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.
இந்தியாவுக்காக விளையாட பலருக்கும் வாய்ப்பு கிடைக்காது. அப்படி வாய்ப்பு கிடைக்கும் போது அதை நாங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். எங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நாங்கள் எப்படி பயன்படுத்துகிறோம் என்று உங்களுக்கு பார்த்தாலே தெரியும். அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் அவருடைய பணி என்ன என்பதை தெளிவாக நாங்கள் கொடுக்கிறோம் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.