லாகூர் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு சென்று இந்த தொடரில் பங்கேற்க மாட்டோம் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்தது.
ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்ற நிலையில் அங்கு தாங்கள் வரமாட்டோம் என இந்தியா அறிவித்ததால், இந்தியா விளையாடிய போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெற்றது. இந்த நிலையில் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வந்தது.

இதற்கு கைமாறு செய்யும் விதமாக பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வந்த நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் எந்தவித இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தது.
மேலும் பாகிஸ்தான் அணியுடன் விளையாட இந்தியா அந்த நாட்டுக்கு செல்லாமல் இருந்தது. இந்த நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் எங்கெங்கு நடைபெறும் என்பது குறித்து மைதானங்களை தேர்வு செய்திருக்கிறது.
அதன்படி இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளிலும் ஒரே மைதானத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி இந்தியா வேறு எங்கும் அலையாமல் பாதுகாப்புடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய முடியும் என்று இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் லாகூரில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது.
மேலும் இந்தியாவுக்கு மிக அருகில் லாகூர் இருப்பதால் பெரும்பாலான ரசிகர்கள் இங்கு வருவதற்கு எளிதான சூழலாக இருக்கும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டு இருக்கிறது. இந்தியாவைத் தவிர மற்ற அணிகள் விளையாடும் போட்டியை கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் நடத்தவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்திருக்கிறது.
எனினும் இந்த தொடர் நெருங்க நெருங்கதான் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லுமா? இல்லை ஏதேனும் தடை ஏற்படுமா என்பது குறித்து தெரியவரும். ஒருவேளை அரசு அனுமதி அளித்தால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி போட்டிகளில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.