மும்பை: ரோஹித் சர்மா, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 2027 உலகக் கோப்பைக்காக தயாராகுவதற்காக முன்பை விட அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டுள்ளது. இதற்காக பல கிரிடககெட் வாரியங்களுடன் ஆலோசனை நடத்திய பிசிசிஐ, கூடுதல் ஒருநாள் போட்டிகளை சேர்த்து இருக்கிறது. இது போன்று சிறிய நாடுகளுடன் டி20 தொடருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரு மாதங்களில், தங்கள் நாட்டுத் தொடர்களில் கூடுதல் ஒருநாள் ஆட்டங்களைச் சேர்க்க பல கிரிக்கெட் வாரியங்களுடன் ஆலோசனை நடத்தி பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. ஐபிஎல் முடிந்து, இந்தியாவுக்கு நெருக்கடி வாய்ந்த அட்டவணை காத்திருக்கிறது. ஆப்கானிஸ்தானுடன் ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகளிலும், பின்னர் இங்கிலாந்துடன் மூன்று ஒருநாள், ஐந்து டி20 ஆட்டங்களிலும் மோதும்.

இங்கிலாந்து பயணத்தின்போது அயர்லாந்துடனும் ஒரு போட்டி விளையாட வாய்ப்புள்ளது. அயர்லாந்தில் விளையாடுவதா அல்லது சவுதாம்ப்டனில் நடைபெறும் மூன்று ஆட்டங்களா என்பது குறித்து கிரிக்கெட் அயர்லாந்தும் பிசிசிஐயும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இந்த கூடுதல் ஒருநாள் ஆட்டங்கள், 2027 செப்டம்பர்-அக்டோபரில் தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பைக்கு இந்தியா தயாராக உதவும்.

டி20 அணி வலிமையாக இருந்தாலும், ஒருநாள் வடிவத்தில் இந்தியா இன்னும் சரியான பலத்தை பெறவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடர் தோல்வி ஒரு பாடமாக அமைந்தது. தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறிப்பிட்டது போல, இளம் வீரர்கள் டி20 கிரிக்கெட்டிலிருந்து 50 ஓவருக்கு மாற தடுமாறுகிறார்கள்.
குறிப்பாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களுக்கு அதிக அனுபவம் தேவைப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுடனான அவரது ஆட்டத்தில் இது வெளிப்படையாகத் தெரிந்தது. இது போன்ற வீரர்கள் பெரிய தொடர்களுக்கு முன்பு அனுபவத்தைப் பெறுவது மிக அவசியம்.

முன்னதாக, ஜனவரியில் இலங்கையில் இரண்டு ஒருநாள் போட்டிகள் ஆட இந்தியா திட்டமிட்டது. டெஸ்ட் சுற்றுப்பயணத்துடன் நடத்த அது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அந்த தொடரில் மூன்று போட்டிகள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. இதனால், கோலி, ரோகித் ஆகியோர் திட்டமிட்டத்தை விட அதிக போட்டிகளில் விளையாட உள்ளனர்.