துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே துபாயில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் டிக்கெட் விலை விற்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
கடந்த ஆறு முறை இரு அணிகளுக்கும் நடைபெற்ற போட்டியில் ஐந்தில் இந்திய அணியும் ஒரு ஆட்டம் மழையாலும் ரத்தாகி இருக்கிறது. இதனால் இந்தியாவே கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த சூழலில் இந்திய அணிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் காத்துக்கொண்டிருப்பதாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் அகிப் ஜாவித் தெரிவித்துள்ளார். துபாயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சாம்பியன்ஸ் கோப்பையில் பல அணிகளிடம் திறம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்".
"ஆனால் எங்களது அணியில் இல்லை என்பது போல் பலரும் பேசி வருவதை நான் அறிகிறேன். ஒவ்வொரு அணியும் அவர்கள் சொந்த பலத்தைக் கொண்டு விளையாடுகிறார்கள். எங்களிடம் தலைசிறந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். தற்போது விளையாடுவதிலேயே சிறந்த வேகப்பந்துவீச்சு கூட்டணி எங்களிடம் தான் இருக்கின்றது".
"எங்கள் ஜாம்பவான்கள் வசீம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோரை நினைவுபடுத்துகிறார்கள். இன்னும் அந்த ஜாம்பவான்களின் லெவலுக்கு இவர்கள் செல்ல கொஞ்சம் நேரம் ஆகலாம். ஆனால் வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோரின் செயல்பாட்டை பிரதிபலிக்கும் திறமை எங்கள் வேகப்பந்துவீச்சாளரிடம் இருக்கின்றது".
"நாங்கள் நல்ல நம்பிக்கையுடன் இருக்கின்றோம். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே ஒரு ஸ்பெஷல் ஃபீலிங் தான். எப்போதுமே அவர்கள் எங்களுக்கு எதிராக நன்றாக விளையாடுவார்கள். ஆனால் நாங்களும் ஸ்பெஷலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆச்சரியத்தை தருவோம். பாகிஸ்தான் அணியில் பக்கர் சமான் ஒரு மேட்ச் வின்னர் தான். ஆனால் நாங்கள் ஒரே ஒரு வீரரை நம்பி விளையாடவில்லை. எங்கள் அணி பலமான அணியாக இருக்கின்றது. பாசிட்டிவான கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற முயற்சி செய்வோம்" என்று ஆகிப் ஜாவித் கூறியுள்ளார்.