கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி அதிரடியாக விளையாடி வருகிறது.இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாகிஸ்தான் இந்திய அணியின் கவனத்தை சிதைக்கும் வகையில் எம்ஜிஆர் காலத்து டெக்னிக்கை பயன்படுத்தி வருகிறார்கள்.
கடந்த போட்டியின் போது மழை மேகங்கள் சூழ்ந்ததால் ஆட்டம் வேகப்பந்துவீச்சாளருக்கு சாதகமாக இருந்தது. இந்த நிலையில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது தவறான முடிவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த போட்டியில் தடுமாறிய கில் இன்று ஆட்டத்தில் அதிரடியாக விளையாடினார். முதல் பத்து ஓவருக்குள்ளேயே அவர் 9 பவுண்டரிகளை அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆப் சைடுக்கு செல்லும் பந்துகளை பேட்ஸ்மேன்கள் தொடாமல் விடுவது வழக்கம்.
அப்படி அது தொடும் பட்சத்தில் அது எட்ஜ் ஆகி பீல்டரிடம் கேட்ச் ஆக மாறிவிடும். இதனால் கில்லும், ரோகித் சர்மாவும் முதல் சில ஓவர்களில் மிகவும் கவனத்துடன் அந்த பந்துகளை விட்டார்கள். அப்போது பின்னால் இருந்த முகமது ரிஸ்வான் பந்தை பிடிக்கும் போதெல்லாம் அதனை அவுட் கேட்பது போல் நாடகமாடினார். இதை போல் செய்வது மூலம் இந்திய வீரர்களை அச்சப்படுத்தி கவனத்தை சிதைக்கலாம் என்பது பாகிஸ்தானின் பிளான் ஆகும்.
இதே போன்ற ஒரு திட்டத்தை தான் அவர் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையின் போது செய்தார். இந்த நிலையில் முஹமது ரிஸ்வான் இவ்வாறு செய்வது கேப்டனுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் வசிம் அக்ரம் கிண்டல் அடித்துள்ளார். முஹமது ரிஸ்வான் இந்த நடவடிக்கை வீட்டில் அமர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்கும் கிரிக்கெட் வர்ணனையாளராக நமக்கும் ஏமாற்றத்தை தான் கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். எனினும் முகமது ரிஸ்வானின் இந்த செய்கை இந்திய வீரர்களை கொஞ்சம் கூட திசை திருப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.