கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 42 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கான இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்புவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகின் அப்ரிடி முதல் ஓவரை வீசினார்.

கடந்த போட்டியில் ஷாகின் அப்ரிடி பந்தில் போல்டாகி ரோகித் சர்மா வெளியேறிய நிலையில், இந்தப் போட்டியில் முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்து ரன் கணக்கை தொடங்கினார். ஆனால் இந்தப் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு நசீம் ஷா அதிக அச்சுறுத்தலை அளித்தார். நசீம் ஷா வீசிய இரு ஓவர்களில் ரோகித் சர்மாவால் ஒரு ரன் கூட சேர்க்க முடியவில்லை. இதனால் ரோகித் சர்மா 24 பந்துகளில் 10 ரன்களிலேயே நீண்ட நேரமாக இருந்தார்.
இதனால் ரோகித் சர்மா விக்கெட் கொடுத்துவிடுவாரோ என்ற பார்க்கப்பட்ட நிலையில், நசீம் ஷா ஓவரிலேயே அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விளாசி ரோகித் சர்மா பதிலடி கொடுத்தார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் சேர்த்தது. இதன்பின்னர் பாகிஸ்தான் அணி ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷடாப் கானை அட்டாக்கில் கொண்டு வந்தது.
இதற்காகவே காத்திருந்த ரோகித் சர்மா, ஹாரிஸ் ராஃப் பந்துவீச்சில் பவுண்டரி விளாசி மிரட்டினார். பின்னர் 13வது ஓவரை வீச ஷடாப் கான் வந்த நிலையில், அந்த ஓவரில் இரு இமாலய சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி ரோகித் சர்மா சேட்டையை கொடுத்தார். அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் ஷடாப் கான் ஓவரில் சிக்சர் அடித்து ரோகித் சர்மா 42 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அடிக்கும் 50வது அரைசதம் இதுவாகும். இதுவரை 240 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 50 அரைசதங்கள் மற்றும் 30 சதங்களை விளாசி இருக்கிறார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 49 பந்துகளில் 4 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.