மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிச்சுற்று போட்டி வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி இம்முறையாவது கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா, ரஹானே, ஜடேஜா,அஸ்வின் போன்ற சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

விக்கெட் கீப்பராக கே எஸ் பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் கேஎல் ராகுல் அணியில் இடம் பெற்றுள்ளதால் அவர் விக்கெட் கீப்பராக செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு கூடுதலாக சில வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார்.
அதன்படி சிஎஸ்கே நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட சர்ப்ராஸ்கான், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இசான் கிஷன், வேகப்பந்து வீச்சாளர்கள் முகேஷ் குமார் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர்களை கூடுதலாக இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல ரோகித் சர்மா கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இதனை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ இந்த வீரர்களை stand by யில் வைத்து இங்கிலாந்துக்கு அனுப்ப முடிவெடுத்து இருக்கிறார்கள். அதன்படி முக்கிய வீரர்கள் ஏதேனும் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விளையாட முடியவில்லை என்றால் இந்த வீரர்களை பிளேயிங் லெவனில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் ருதுராஜ் மற்றும் சர்பிராஸ் கான் பெயர் டெஸ்ட் போட்டிக்கு பரிசீலனை செய்யப்பட்டிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.