செயின்ட் லூசியா: இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட்டில் 79 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.
விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளிடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது. கிங்ஸ்டனில் நடந்த 2-வது டெஸ்டிலும் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. மழை மற்றும் ரோஸ்டன் சேசின் (137 ரன்) நிலையான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோய் போட்டி டிராவில் முடிந்தது.
இரண்டு போட்டிகளில் முடிவடைந்துள்ள நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. எஞ்சியுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி கண்டால் டெஸ்டில் மீண்டும் 'நம்பர் 1' இடத்தை பிடித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாசில் வென்ற மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஹோல்டர் பீல்டிங் தேர்வு செய்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியில் சுழற்பந்து வீச்சாளர் பிஷூ நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் தொடக்க வீரர் சந்திரிகா நீக்கப்பட்டு ஜான்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உமேஷ் யாதவ், மிஸ்ரா மற்றும் புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதற்குப் பதிலாக ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ரோகித் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். முரளி விஜய் குறி்த்து இந்திய அணி பரிசீலிக்கவில்லை.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ராகுலும், தவானும் களம் இறங்கினார்கள். ராகுல் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த கேப்டன் விராட் கோஹ்லி 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்தியா 19 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.
அடுத்து ராகுல் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அத்துடன் 50 ரன்னில் வெளியேறினார்.
4-வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா 9 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் ரகனே 35 ரன்னில் அவுட்டாகினார். தற்போது 79 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. அஸ்வின் 50 ரன்களுடனும், ஷாக 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.