
ரோகித் அதிரடி
இதனையடுத்து கேஎல் ராகுல் , ரோகித் சர்மா ஜோடி களத்துக்கு வந்தது.. 13 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்சரும், 2 பவுண்டரிகளும் அடங்கும். மறுமுனையில் கேஎல் ராகுல் பொறுமையாக விளையாடினார். 2 சிக்சர்களை ராகுல் அடித்தாலும் அமைதியோ.. அமைதி என்று 39 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்கள் அடித்தார். ராகுலை ஆட்டமிழக்க வைத்து ஹாங்காங் மாபெரும் தவறு செய்துவிட்டது.

விராட் கோலி அரைசதம்
சூர்யகுமார் யாதவ் தொடக்கம் முதலே அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தார். மறுமுனையில் நிதானமாக விராட் கோலி ஆடினாலும், பிறகு தனது முத்திரையை பதிக்க தொடங்கினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 31 அரைசதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார். அதிக முறை சர்வதேச டி20 போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மாவின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் ரசிகர்களுக்கு வாண வேடிக்கை காட்டினார்.

சூர்யகுமார் அபாரம்
இதன் மூலம் 22 பந்துகளில் சூர்யகுமார் அரைசதம் விளாசினார். குறிப்பாக கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் 26 ரன்களை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 4 சிக்சர் பறக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் 26 பந்துகளில் 68 ரன்களும், விராட் கோலி 59 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங்கும் தங்களது சக்திக்கு ஏற்ப போராடி ரன்களை சேர்த்தனர்.

பாகிஸ்தானுக்கு ஆபத்து
குறிப்பாக அந்த அணியின் பாபர் ஹயாத் 35 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். இதே போன்று கின்சிட் ஷா 30 ரன்களும், செஷான் அலி 17 பந்துகளில் 26 ரன்களும் அடிக்க, மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாட தவறிவிட்டனர். இதனால் 20 ஓவர் முடிவில் ஹாங்காங் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ஹாங்காங் கத்துக்குட்டி அணியாக இருந்தாலும், நன்கு போராடியது. இதனால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில், அந்த அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் தொடரை வட்டு விலகிவிடும்.


Click it and Unblock the Notifications