டெல்லி: அயர்லாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனைகள் தீப்தி ஷர்மா மற்றும் பூனம் ராவுத் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்து இமாலய சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 8-வது ஆட்டத்தில் இந்திய அணி அயர்லாந்துடன் மோதியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் தீப்தி மற்றும் பூனம் ஜோடி நங்கூரம் இட்டு அயர்லாந்து பந்துவீச்சை அடித்து துவைத்தனர். இருவரும் சதமடித்து முதல் விக்கெட்டுக்கு 320 ரன்கள் குவித்தனர்.
160 பந்துகளில் 188 ரன்கள் (27 பவுண்டரி, 2 சிக்ஸர்) விளாசிய நிலையில் தீப்தி ஆட்டமிழந்தார். பூனம் 109 ரன்கள் எடுத்து ரிடயர்ட் அவுட் முறையில் வெளியேறினார். பின் ஷிகா பாண்டே அதிரடியாக 14 பந்துகளில் 27 ரன்களை விரைவாக எடுத்தார். இறுதியில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 358 ரன்கள் எடுத்தது.
359 ரன்கள் வெற்றி இலக்கை விரட்டிய அயர்லாந்து அணி மளமளவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, 109 ரன்களிலேயே ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம், இந்திய மகளிர் அணி 248 ரன்கள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது. இதற்கு முன், கடந்த 2004ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 298 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாகும்.