மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியைத் தழுவி ரசிகர்களை ஏமாற்றி விட்டது. இப்போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரையும் ஆஸ்திரேலியா வென்று விட்டது.
முன்னதாகவிராத் கோஹ்லி சதத்தாலும், ஷிகர் தவான் மற்றும் ரஹானே ஆகியோரின் அரை சதத்தாலும் இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்தது.
முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 300 ரன்களைத் தாண்டிக் குவித்தும் கூட ஆஸ்திரேலியா அழகாக சேஸ் செய்து வெற்றியைத் தட்டிச் சென்றது. இந்த நிலையில் முதல் முறையாக இந்தியா இப்போட்டியில் 300 ரன்களுக்கும் குறைவாக எடுத்துள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்திருந்தனர். அவர்களது கவலை இன்று நிஜமாகி விட்டது.

முன்னதாக விராத் கோஹ்லி சிறப்பாக விளையாடி 117 ரன்களைக் குவித்தார். அதே அளவிலான பந்துகளைச் சந்தித்த அவர் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் இந்த சதத்தைப் போட்டார்.
ஷிகர் தவான் 91 பந்துகளைச் சந்தித்து 68 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அஜிங்கியா ரஹானே தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 55 பந்துகளில் 51 ரன்களை அவர் எடுத்தார். கேப்டன் டோணி அதிரடியாக ஆடினார். 9 பந்துகளில் 23 ரன்களை அவர் குவித்து ஆட்டமிழந்தார்.
தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்த முறை ஏமாற்றி விட்டார். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் ஹேஸ்டிங்ஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார். ரிச்சர்ட்சன், பால்க்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆட வந்த ஆஸ்திரேலியா நிதானமாக வெற்றி இலக்கை நோக்கி நடை போட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ஷும், பின்ச்சும் நிதானமாக அடித்து ஆடினர். இவர்களை உமேஷ் யாதவ் பிரித்தார். பின்ச் 21 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய மார்ஷ் 62 ரன்களைச் சேர்த்தார்.
கேப்டன் ஸ்மித் 41 ரன்கள் விளாச, பெய்லியின் பங்கு 23 ஆகும். சரி முக்கியமானவர்களை தூக்க விட்டோம் என்று இந்தியத் தரப்பில் சற்று நம்பிக்கை வந்தபோது இது நாள் வரை சரிவர ஆடாமல் இருந்த மேக்ஸ்வெல் வெளுத்து விட்டார். அதிரடியாக ஆடிய அவர் 96 ரன்களைக் குவித்தார்.
இறுதியில், ஆஸ்திரேலியா 48.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்களை எடுத்து வென்றது.
இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் இந்தியா முதலில் பேட் செய்தது. ஆஸ்திரேலியா சேஸ் செய்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.