மவுண்ட் மவுங்கானுயி: நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. நேப்பியரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி, அபார வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து 2வது போட்டி மவுன்ட் மாங்கனுயில் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த போட்டியில் விளையாடிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணியே இப் போட்டியிலும் களமிறங்கியது.
நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் சன்ட்னர், வேகப்பந்து வீச்சாளர் சவுதி நீக்கப்பட்டு சோதி, கிராண்ஹோம் திரும்பியுள்ளனர். டாஸ் வென்ற இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து தொடர்ந்து விளையாடினர். அணியின் ஸ்கோர் 151 ஆக இருந்த போது, தவான் 66 ரன்களில் போல்ட் பந்தில் கேட்சாகி வெளியேறினார்.
அதன்பின்னர் கேப்டன் கோலி களமிறங்கினார். இருவரும் நிதானமாக பந்தை எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். அணியின் ஸ்கோர் மேலும் 17 ரன்களாக உயர்ந்த போது சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் 87 ரன்களில் பெர்குசன் பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்த ஒருநாள் போட்டியின் மூலம், ரோஹித் ஷர்மாவுக்கு 38வது அரை சதத்தையும், தவான் 27வது அரைசதத்தையும் எட்டினர். அவரை தொடர்ந்து, களமிறங்கிய கேப்டன் கோலி 43 ரன்கள் எடுத்த திருப்தியுடன் வெளியேறினார்.
அம்பத்தி ராயுடு 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் தோனியும், கேதர் ஜாதவும் அதிரடி காட்டினர். கேதர் ஜாதவ் தாம் எதிர்கொண்ட 10 பந்துகளில் 22 ரன்களை எடுத்தார். தோனி 33 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 324 ரன்கள் எடுத்தது. தோனியும், ஜாதவும் ஆட்டமிழக்காமல் கடைசி வரை இருந்தனர்.
அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக குப்திலும், முன்ரோவும் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 23 ரன்களாக இருந்தபோது முதல் நபராக ஆட்டமிழந்தார் குப்தில். அவரை தொடர்ந்து வில்லியம்சன் வெளியேறினார்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, நியூசிலாந்து அணி 41வது ஓவரில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக பிரேஸ்வெல் 57 ரன்கள் குவித்தார்.