போர்ட் ஆப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 438 ரன்களை குவித்துள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 57 ரன்களும், சுப்மன் கில் 10 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 80 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியில் தனது இடத்தை காப்பாற்றி கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஹானே 8 ரன்களில் போல்ட் ஆனார்.

139 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி, 182 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, சரிவிலிருந்த இந்திய அணியை பார்ட்னர்ஷிப் அமைத்து விராட் கோலியும், ஜடேஜாவும் இணைந்து மீட்டனர். ஜடேஜா அரைசதம் கடக்க, சிறப்பாக விளையாடிய விராட் கோலி 121 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 29வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தன்னுடைய 2வது இன்னிங்சில் களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக விளையாட முற்பட்டு 25 ரன்களில் வெளியேறினார். இதில் 4 பவுண்டரிகள் அடங்கும்.
எனினும் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் இன்று தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்ட அஸ்வின் 8 பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் பந்து வீச்சில் தான் நமக்கு தொல்லை தராருனு பார்த்தால் பேட்டிங்கிலும் நம்மை வெறுப்பேற்றுகிறாரே என்று வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நினைக்க தொடங்கினர்.
அஸ்வினை பேட்டிங்கை பார்த்து விட்டு பேசாமல், அவரை 3வது வீரராககளமிறக்கலாம் என்று ரசிகர்களும் கமெண்ட் அடித்தனர். அஸ்வின் 56 ரன்கள் எடுக்க இந்திய அணி 438 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமர் ரோச், வாரிக்கன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.