
விக்கெட்ஸ் கொலாப்ஸ்
நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா, 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் ஷர்மா 11 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 17 ரன்களிலும் அவுட்டானார்கள். பிறகு, புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, முதன் முறையாக 5வது வீரராக களமிறக்கப்பட்ட ஜடேஜா, 10 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தாலும், 50 ரன்னில் ஓலே ராபின்சன் ஓவரில் எட்ஜ் ஆகி வெளியேறினார். பிறகு துணை கேப்டன் 14 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் வெளியேற, இந்தியா 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. எனினும், கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாகூர், 36 பந்துகளில் 57 ரன்களை விளாசினார். இதில், 3 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். 8வது விக்கெட்டுக்கு ஷர்துல் தாகூர் - உமேஷ் யாதவ் பார்ட்னாட்ஷிப் 63 ரன்கள் சேர்த்தது.

மிடில், லோ ஆர்டர் அபாரம்
பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணியில், பும்ராவின் ஓரே ஓவரில் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹஸீப் ஹமீத் வெளியேறினார்கள். பர்ன்ஸ் 5 ரன்களில் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டாக, ஹஸீப் எட்ஜ் ஆகி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். இதன் பிறகு, 3வது விக்கெட்டுக்கு ஜோ ரூட், டேவிட் மலன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால், இந்த தொடரில் மூன்று சதங்கள் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், உமேஷ் யாதவ் ஓவரில் போல்டாகி 21 ரன்களில் வெளியேறினார். அதுவும், முதல் நாள் ஆட்டம் முடியவிருந்த நேரத்தில், அவர் அவுட்டானது இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. நேற்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கிய போது, இங்கிலாந்து அணி நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய கிரெய்க் ஓவர்டன் விக்கெட்டையும், டேவிட் மலன் விக்கெட்டையும் அடுத்தடுத்து இழந்தது. அதாவது, 62 ரன்களுக்கெல்லாம் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இதன் பிறகு, ஆறாவது விக்கெட்டுக்கு ஜானி பேர்ஸ்டோ - ஓலே போப் ஜோடி, ஆட்டத்தை இந்தியாவின் கைகளில் இருந்து பறித்துச் சென்றது. எவ்வளவோ போராடியும், இந்த பார்ட்னர்ஷிப்பை இந்திய பவுலர்களால் பிரிக்கவே முடியவில்லை. 6வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்களை சேர்த்தது. அணி ஸ்கோர் 151-ஆக இருந்த போது தான் பேர்ஸ்டோ அவுட்டானார். பிறகு மெல்ல மெல்ல சதத்தை நோக்கி முன்னேறிய ஓலே போப், 81 ரன்கள் எடுத்திருந்த போது ஷர்துல் தாகூர் ஓவரில் போல்டானார்.

2வது இன்னிங்ஸ்
மொயீன் அலி தன் பங்குக்கு 35 ரன்கள் எடுக்க, இறுதிக் கட்டத்தில் க்றிஸ் வோக்ஸ் இந்திய பவுலர்களை படாதபாடு படுத்திவிட்டார். அவர் 60 பந்துகளில் 50 ரன்கள் விளாசி, கடைசி விக்கெட்டாக ரன் அவுட்டாக, இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் சேர்த்தது. அதாவது இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை, பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டிருந்தாலும், இந்திய தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் சிறப்பாகவே விளையாடினார்கள். இந்நிலையில், மூன்றாவது நாளான இன்றும், இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ராகுல், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட்சைட் எட்ஜ் ஆகி 46 ரன்களில் வெளியேறினார். பிறகு களமிறங்கிய புஜாரா, ரோஹித் ஷர்மாவுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார். பிறகு, மொயீன் அலி ஓவரில் இறங்கி வந்து மெகா சிக்ஸர் விளாசிய ரோஹித், இந்திய மண்ணுக்கு வெளியே.. அதாவது வெளிநாட்டில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.

அடுத்தடுத்த விக்கெட்
205 பந்தில் தனது சதத்தை நிறைவு செய்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தின் எட்டாவது சதமாகும். ஒரு தொடக்க வீரராக நான்காவது டெஸ்ட் சதமாகும். இந்த இன்னிங்ஸின் மூலம், அவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் 11,000 ரன்களை கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை நிறைவு செய்தார். மேலும் இங்கிலாந்தில் ஒரு தொடக்க வீரராக சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் எனும் பெருமையையும் அவர் பெற்றார். பிறகு, இங்கிலாந்து புதிய பந்தை கையில் எடுத்தது. இதற்கு கை மேல் பலனாக, ரோஹித் ஷர்மா 127 ரன்களில் கிரெய்க் ஓவர்டன் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். பிறகு, ராபின்சன் வீசிய அடுத்த ஓவரிலேயே புஜாரா ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பிறகு, இங்கிலாந்து பவுலர்கள் மீண்டும் ஆக்ரோஷம் காட்டத் தொடங்கினர்.

300 ரன்கள் இலக்கு?
எனினும், விராட் கோலி மிக நிதானமாக பேட்டிங் செய்தார். புஜாரா அவுட்டான பிறகு, ஐந்தாவது விக்கெட்டுக்கு மீண்டும் ரவீந்திர ஜடேஜா களமிறக்கப்பட்டார். ஹெட்டிங்லே டெஸ்ட்டில், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் கொலாப்ஸ் ஆனது போல், இந்த இன்னிங்ஸிலும் ஆகிவிடுமோ என்று இந்திய ரசிகர்கள் பீதியடைந்தனர். எனினும், கோலி - ஜடேஜா பார்ட்னர்ஷிப் ஓரளவுக்கு நம்பிக்கை தரும் விதமாக, 33 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது. மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைய, அரைமணி நேரமே மீதமிருந்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக, போட்டி நிறுத்தப்பட்டது. பிறகு, மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா இப்போது, இங்கிலாந்தை விட, 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளை, நான்காம் நாள் ஆட்டத்தில், எப்படியாவது மேற்கொண்டு 100 - 130 ரன்கள் சேர்த்துவிட்டால் இங்கிலாந்துக்கு 300 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கலாம். அப்படி நிர்ணயிக்கும் பட்சத்தில், இங்கிலாந்தை அந்த இலக்கிற்குள் ஆல் அவுட் செய்ய இந்தியா முயற்சிக்க முடியும். இங்கு நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது. இந்திய அணியில் இப்போது முகமது ஷமி இல்லை. ஆகையால், 2வது இன்னிங்ஸ் பவுலிங்கில் உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர் மிக எச்சரிக்கையாக பந்து வீச வேண்டியது அவசியம். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஷர்துல் தாகூரை நிச்சயம் டார்கெட் செய்வார்கள். ஸோ, 300 ரன்கள் நிர்ணயித்தாலும், இந்திய அணி மிக மிக கவனமாக பந்து வீச வேண்டும்.


Click it and Unblock the Notifications