விராட் கோலியின் கிளாசிக்... கடைசி 5 ஓவர்களில் 48 ரன்கள்.. தென்னாப்பிரிக்காவை பந்தாடிய ஜடேஜா!
கொல்கத்தா: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெறுவதற்கு 327 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 47வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி அதிரடியாக ரன்களை சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கேப்டன் ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து விராட் கோலி களமிறங்கி அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசினார். இதனைத் தொடர்ந்து சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 25 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 143 ரன்கள் சேர்த்தது.
இதனைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரும் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக செயல்படுவதை அறிந்து விராட் கோலி ஒரு பக்கம் விக்கெட் கொடுக்காமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்த பின் அதிரடிக்கு திரும்பினார்.
சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 87 பந்துகளில் 2 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 239 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து களத்தில் இருந்தது. தொடர்ந்து வந்த கேஎல் ராகுல் யான்சன் பந்தில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்த வெளியேற, சரியான நேரத்தில் விராட் கோலியுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார்.
இதன்பின் எதிர்பார்த்தை போல் ஃபீல்டிங்கை பயன்படுத்தி அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசினார் சூர்யகுமார் யாதவ். ஆனால் ஷம்சி வீசிய பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்து 22 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 46 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 119 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதன்பின் ஆட்டத்தை கட்டுப்பாட்டை ஜடேஜா கையில் எடுத்தார்.
கடைசி 2 ஓவர்களில் ஜடேஜா மொத்தமாக பவுண்டரி, சிக்ஸ் என்று வெளுத்து கட்டினார். கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி என்று வெளுத்து கட்டிய ஜாடேஜாவின் அதிரடியால் அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 101 ரன்களும், ஜடேஜா 29 ரன்களும் சேர்த்தனர்.


Click it and Unblock the Notifications