ஏமாற்றிய புஜாரா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் போட்டியில், இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் மட்டும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து 41 ரன்கள் எடுக்க, கேப்டன் கோலி உள்ளிட்ட இதர வீரர்கள் எந்தவித தாக்கமும் ஏற்படுத்தவில்லை. டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், லோ ஆர்டர் என எந்த ஆர்டரும் ஜொலிக்கவில்லை. குறிப்பாக, அடுத்த டிராவிட் என்று எதிர்பார்க்கப்படும் புஜாரா பேட்டிங்கில் ஏகப்பட்ட சொதப்பல். அஷ்வின் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட்டான விதத்துக்கும், புஜாரா ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறிய விதத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
டீ இடைவேளைக்கு பிறகு
இந்நிலையில், 139 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து ஆடி வருகிறது. தேநீர் இடைவேளைக்கு முன்பு வரை, இந்திய அணி எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. பந்து ஸ்விங் ஆகவில்லை. விக்கெட்ஸ் கிடைக்கவில்லை. எனினும், ஸ்பின் ட்ரை பண்ணாமல் வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் பயன்படுத்தினார் கேப்டன் கோலி. எனினும், டீ இடைவேளைக்கு பிறகு கதையே மாறியது.
2 விக்கெட்ஸ்
அஷ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார். அவரது முதல் விக்கெட்டாக அமைந்தது டாம் லாதம். அஷ்வின் ஓவரில் இறங்கி அடிக்க ஆசைப்பட்ட லாதம் 9 ரன்களில் அவுட்டானார். பிறகு, அஷ்வின் ஓவரில் டெவோன் கான்வே 19 ரன்களில் எல்பி ஆனார். எனினும், நியூசிலாந்து கைவசம் இன்னும் 8 விக்கெட்டுகள் உள்ளன. வில்லியம்சன் மற்றும் ராயல் டெய்லர் களத்தில் உள்ளனர்.
நியூஸி., தடுமாற்றம்
இதில் உண்மையில் அஷ்வினின் பங்கு தான் மகத்தானது. டீ குடித்துவிட்டு திரும்பி வரும் வரை நம்பிக்கையுடன் இருந்த நியூசிலாந்து அணியை ஆட்டம் காண வைத்துள்ளார். குறிப்பாக, போட்டி இன்னும் முடியவில்லை என்பதை எதிரணிக்கு உரக்கச் சொல்லி இருக்கிறார். இந்தியா ஜெயித்தாலும், தோற்றாலும், சவுத்தாம்ப்டன் போன்ற கடினமான ஆடுகளங்களில் ஒரு ஸ்பின்னராக தன்னாலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் நம்ம அஷ்வின்.