நியூசிலாந்து டாமினேஷன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின், முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 19ம் தேதி தான் டாஸ் போடப்பட்டு இப்போட்டி தொடங்கப்பட்டது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர். பிறகு, நேற்று நடந்த ஐந்தாவது நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கான்வே அதிகபட்சமாக 54 ரன்களும், வில்லியம்சன் 49 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஷமி 4, இஷாந்த் 3, அஷ்வின் 2, ஜடேஜா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம், இந்தியாவை விட அந்த அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது.
ரிசர்வ் டே பிளே
இதைத் தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில், ஷுப்மன் கில் 8 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 30 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரையும் டிம் சவுதி எல்பிடபிள்யூ ஆக்கினார். நேற்றைய 5வது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று (ஜூன்.23) மாற்று நாளில் தொடங்கிய ஆட்டத்தில், கேப்டன் கோலி மிக விரைவாக 13 ரன்களில், ஜேமிசன் ஓவரில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார். அதேபோல், புஜாராவும் 15 ரன்களில் ஜேமிசன் பந்தில் வெளியேறினார். பிறகு ரஹானேவை 15 ரன்களில் போல்ட் வெளியேற்ற, இந்தியா லன்ச்சுக்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை இழந்தது.
இறங்கி சுழற்றும் பண்ட்
இந்நிலையில், மதிய உணவு நேரத்தின் போது, பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு முக்கிய டிப்ஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீல் வாக்னர் மற்றும் சவுதி பந்துகளை டார்கெட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. போல்ட் மற்றும் ஜேமிசன் பந்துகளை அறவே அவாய்ட் செய்துவிட்டு, மற்ற இரு ஃபேஸர்களையும் விளாச ஐடியா கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால், ரிஷப்போ லன்ச் முடிந்த பிறகு ஜேமிசன் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தையே இறங்கி வந்து தூக்கி அடிக்க முயற்சி செய்ததை காண முடிந்தது. ஏதோ, ஸ்பின் பந்தை அடிப்பது போல் இறங்கி வந்து ஆடினார். ஆனால், பந்து சிக்கவில்லை.
ஒரு மணி நேரத்தில்
தற்போது இந்திய அணி 100 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், எப்படியாவது, மேற்கொண்டு 80 ரன்கள் சேர்க்க அணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். ஸோ, 170 - 180 என்று டார்கெட் ஃபிக்ஸ் செய்யும் பட்சத்தில், நியூசிலாந்துக்கு டஃப் கொடுக்கலாம் என்பதே இந்திய அணியின் வியூகம் என்பதே தற்போது வெளியாகியிருக்கும் தகவலாகும். இன்னும் ஒருமணி நேரத்தில், போட்டி எந்த திசையில் செல்கிறது என்பது தெரிந்துவிடும்.