மொஹாலி: இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களை எடுத்துள்ளது.
முன்னதாக இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு சுருண்டு போனது நினைவிருக்கலாம். இங்கிலாந்து தரப்பில் அலிஸ்டர் குக் 27, ஜோரூட் 15, மொயீன் அலி 16 எடுத்தனர்.

ஜானி பேர்ஸ்டோ கடுமையாகப் போராடி 89 ரன்களை எடுத்தார். பென் ஸ்டோக்ஸ் 29, ஜோஸ் பட்லர் 43, கிறிஸ் வோக்ஸ் 25 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முரளி விஜய் 12 ரன்களில் வீழ, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம் பெற்ற பார்த்திவ் படேல் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சட்டேஸ்வர் புஜாரா 51 ரன்கள் குவித்தார்.
மறுபக்கம் கேப்டன் விராத் கோஹ்லி 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அஜிங்கியா ரஹானேவுக்கு முட்டை கிடைத்தது. இவர்களை விட கடைசி நேரத்தில் கை கொடுத்தவர்கள் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும்தான். இருவரும் இணைந்த பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நல்ல ஆல் ரவுண்டர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்களது ஆட்டம் அமைந்தது.
அஸ்வின் சிறப்பாக ஆடி 57 ரன்களையும், ஜடேஜா 31 ரன்களையும் எடுத்து ஆட்ட நேர இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில் 2வது நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.