புனே : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது.இதில் பலம் வாய்ந்த அணிகள் என்றால் ஆஸ்திரேலியாவையும் பாகிஸ்தானையும் சொல்லலாம்.
ஆனால் இவ்விரு அணிகளும் சமீப காலமாக நல்ல ஃபார்மில் இல்லை. அடுத்ததாக இந்தியா வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் தான். அவர்களை பலமான அணிகள் என்று ஒப்புக்கொள்ள முடியாது.

இந்த நான்கு போட்டிகளிலும் இந்தியாவுக்கு சாதகமான முடிவு வந்தாலும், இந்தியா சில தவறுகளை செய்து வருகிறது. அதனை சரி செய்தால் மட்டுமே நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா போன்ற பெரிய அணிகளை எதிர்கொள்ளும் போது சிக்கல் எழாமல் இருக்கும். அது என்னவென்று தற்போது பார்க்கலாம். இன்றைய ஆட்டத்திலும் சரி கடந்த சில போட்டிகளிலும் சரி இந்திய அணியின் பந்துவீச்சில் ஒரு பெரிய மைனஸ் பாயிண்ட் இருக்கிறது.
மற்ற அணிகள் எல்லாம் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி வரும் நிலையில் இந்திய அணி இரண்டு ஸ்பின்னர்களை தான் பயன்படுத்துகிறது. ஆல்ரவுண்டர் வேண்டும் என ஷர்துல் தாக்கூரை இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் விளையாட வைத்தது. ஆனால் அவர் ஒன்பது ஓவர்கள் வீசி 59 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.
பந்துவீச்சு இன்னும் மேன்மை அடைய வேண்டும். அவர் ஓவரில் அதிக ரன்கள் செல்வது இந்தியாவுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படுத்தும். இதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் முகமது சிராஜ் கடந்த சில போட்டிகளாக அதிக ரன்கள் விட்டுக் கொடுக்கிறார். உதாரணத்துக்கு பும்ரா 10 ஓவரில் 41 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த நிலையில் சிராஜ் 10 ஓவரில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார்.
எனினும் சிராஜ் அதிர்ஷ்டவசமாக விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். இது வங்கதேசத்துக்கு எதிராக வேண்டுமானால் எந்த பிரச்சினையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் பலமான அணிகள் சிராஜின் பந்துவீச்சை குறி வைத்து அடிக்க நேரிடும். இதே போன்று இந்திய அணியின் பேட்டிங் தரமாக இருக்கிறது.
எனினும் கீழ் வரிசை வீரர்கள் தங்களுடைய பேட்டிங் திறனை இன்னும் உலக கோப்பையில் வெளிப்படுத்தவில்லை. உதாரணத்திற்கு ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் எப்படி விளையாடுவார்கள் என்பதை இந்தியா முன்கூட்டியே வாய்ப்பு வழங்கி அவர்களுக்கும் மேட்ச் பிராக்டிஸ் கொடுக்க வேண்டும்.