ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய வீரர்கள் 2 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

இருப்பினும் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஷ்வால், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தயாராவதற்காக கடந்த வாரமே ரஹானே தலைமையிலான இந்திய வீரர்கள் சிலர் வெஸ்ட் இண்டீஸ் புறப்பட்டனர்.
இதன்பின்னர் 2 நாட்களுக்கு முன் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் இந்திய வீரர்களுடன் இணைந்தனர். இதையடுத்து இந்திய வீரர்கள் அனைவரும் பீச் வாலிபால் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன் இந்திய அணி எந்த பயிற்சி போட்டியிலும் விளையாடவில்லை. இந்திய அணியின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. அதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் இந்திய வீரர்கள் பயிற்சிக்கு ஏதுவாக பிசிசிஐ பயிற்சிப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் முதல்முறையால வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள யஷஸ்வி கெய்ஷ்வால், சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் உள்ளிட்டோருக்கு நல்ல பயிற்சிக் களமாக இந்தப் போட்டி அமையும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.