மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில், அதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி உடற்தகுதி காரணமாக பெயர் இடம் பெறவில்லை. அதேசமயம், ஜஸ்பிரித் பும்ரா இந்திய வேகப்பந்துவீச்சின் முதன்மை வீரராக இடம் பெற்றிருக்கிறார். ஆனால், இதில் ஒரு பின்னடைவு இருப்பதாகத் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
பும்ரா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்ற தகவலை அவர் தெரிவித்து இருக்கிறார். கடைசியாக இந்தியா விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா காயமடைந்தார். அந்தத் தொடருக்குப் பிறகு அவர் நீண்ட காலமாக ஓய்வில் இருந்து வந்தார்.

அதன் பின்னர் 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்காக விளையாடத் தொடங்கினார். ஆனால், அவர் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் அளவுக்கு முழு உடல் தகுதியை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இடையே அவருக்கு ஒரு ஓய்வு அளிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் பிசிசிஐ மருத்துவக் குழு சுட்டிக்காட்டி இருக்கிறது.
மேலும், பும்ரா தனிப்பட்ட முறையிலும் தான் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவதற்குத் தயாராக இருப்பதாக நினைக்கவில்லை எனத் தேர்வு குழுவிடம் வெளிப்படையாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது. எனவேதான், அவருக்குத் துணை கேப்டன் பதவியும் அளிக்கப்படவில்லை.
பும்ரா நிச்சயமற்ற சூழ்நிலையில் இருக்கிறார். ஷமியும் இல்லை எனும் நிலையில் கூடுதலாக இந்திய அணியில் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்: முகமது சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் நிதீஷ் குமார் ரெட்டியும் வேகப்பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டராக உள்ளார்.
பும்ரா ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தாலும், அடுத்து வரும் டெஸ்ட் தொடர்களிலும் அவர் விளையாடுவது அவசியம் என்பதால் இந்த முடிவை இந்திய அணி ஏற்றுதான் ஆக வேண்டும். ஏற்கனவே, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இரண்டு அனுபவ வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்று இருக்கின்றனர். சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினும் ஓய்வு பெற்று இருக்கிறார். இந்த நிலையில், பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பது நிச்சயம் பின்னடைவான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இந்திய டெஸ்ட் அணி: சுப்மல் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட்( துணை கேப்டன் / விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், நிதீஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், அபிமன்யு ஈஸ்வரன், துருவ் ஜூரல், ஆகாஷ் தீப்