பிரிட்ஜ்டவுன் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரிட்ஜ் டவுனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பேட்டிங் செய்ய முடியாமல் கடுமையாக தடுமாறினர். தொடக்க வீரர் மெயர்ஸ் 2 ரன்களில் ஹர்திக் பந்தில் ஆட்டமிழந்தார். ஏத்தனைஸ் 22 ரன்களில் வெளியேற, பிரான்டன் கிங் 17 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய ஷிம்ரன் ஹெட்மயர் 11 ரன்கள் மட்டுமே சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 88 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், குல்தீப் யாதவ், ஜடேஜா ஜோடி பந்துவீச்சில் கூட்டணி அமைத்து விக்கெட்டுகளை வேட்டையாடினர்.
போவெல் 4 ரன்களிலும், ரோமேரியோ செஃப்ர்ட் டக் அவுட்டாகியும் வெளியேறினர். குல்தீப், ஜடேஜா பந்துவீச்சை கொஞ்சம் கூட தாக்குப் பிடிக்க முடியாமல், சீட்டுக்கட்டு போல் விக்கெட்டுகள் சரிந்தன. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ஓவர் முடிவில் 114 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் பேட்டிங் வரிசை தலைக்கீழ் மாற்றப்பட்டது. ரோகித் சர்மாவும், விராட் கோலியும் தங்களது இடத்தை தியாகம் செய்து கொண்டனர். இதனையடுத்து இஷான் கிஷன், சுப்மன் கில் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
சுப்மன் கில் 7 ரன்களில் வெளியேற சூர்யகுமார் யாதவ் 3வது வீரராக களமிறங்கி 3 பவுண்டரிகளை அடித்து அதிரடியாக விளையாட முற்பட்டு 19 ரன்களில் வெளியேறினர். ஹர்திக் பாண்டியா துரதிர்ஷ்டவமாக 5 ரன்களில் ரன் அவுட்டாக, இந்திய அணியும் தடுமாறியது.
எனினும் தொடக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 46 பந்துகளில் 52 ரன்களை சேர்த்தார். இதில் 7 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும். இதனையடுத்து ஷர்துல் தாக்கூருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. எனினும் அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதனையடுத்து பேட்டிங் வரிசையில் 7வது வீரராக 12 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கிய ரோகித் சர்மா, ஜடேஜாவுடன் இணைந்து இந்திய அணியின் வெற்றியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றார்.
இந்திய அணி இந்த இலக்கை 22.5வது ஓவரிலேயே எட்டியது. குல்தீப் யாதவ் 3 ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்திய அணி 9வது முறையாக தொடர்ந்து வென்று இருக்கிறது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், இரு அணிகளும் பேட்டிங் செய்ய தடுமாறியது குறிப்பிடத்தக்கது.