மும்பை: 2025 ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தில் இரண்டு மாதம் டெஸ்ட் தொடரில் பங்கேற்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அந்த சுற்றுப்பயணம் முடிந்த இரண்டு வாரங்களில் வங்கதேசம் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் துவங்க உள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் இந்திய ஒரு நாள் அணியில் இருந்து விராட் கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல் ஆகியோர் இடம் பெற மாட்டார்கள் என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

ஏனெனில், மிகவும் நீண்ட ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு, அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு மாதங்கள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி வீரர்கள் விளையாட உள்ளனர். அதன் பிறகு அவர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
எனவே, அடுத்து இரண்டு வாரங்களில் துவங்கும் வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இளம் வீரர்கள் பலரையும் விளையாட வைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே டெஸ்ட் அணியில் இடம் பெற்று விளையாட உள்ள விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளது.
ஆனால், கேப்டன் ரோஹித் சர்மா வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்காது எனவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. தற்போது ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெற்று இருக்கிறார்.
ஆனால், டெஸ்ட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறவில்லை எனவும் விளக்கம் அளித்து இருந்தார். அவரது செயல்பாடு டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது சராசரி 6.20 மட்டுமே. மிக மோசமாக பேட்டிங் செய்திருந்தார். எனவே அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்படாது என கூறப்படுகிறது.
எனவே, அவர் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவார். வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆகஸ்ட் 17, 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகஸ்ட் 26, 29 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.