கேப் டவுன் : இந்திய அண்டர் 19 அணியை சேர்ந்த அர்ஷின் குல்கர்னி என்ற இளம் வீரர், தனது ஆதர்ச நாயகனான தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜாக்கஸ் காலிஸ்-ஐ சந்தித்து அவர் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக விளங்கிய ஜாக்கஸ் காலிஸ் மீது 6 வயது முதலே இனம் புரியாத ஈர்ப்பை கொண்டு இருந்த அர்ஷின் குல்கர்னி, சிறுவயதில் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் ஜாக்கஸ் காலிஸ் தான் என்றும், தான் அவரைப் போலவே கிரிக்கெட் ஆல் - ரவுண்டர் ஆகப் போகிறேன் என்றும் சொல்லிக் கொண்டு இருந்திருக்கிறார்.

அது விளையாட்டு இல்லை என நிரூபித்து தற்போது உண்மையிலேயே வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக இந்திய அண்டர் 19 அணியில் இடம் பிடித்து இருக்கிறார் அர்ஷின். தற்போது அண்டர் 19 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. அதில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றுள்ள அர்ஷின் குல்கர்னி அங்கே ஜாக்கஸ் காலிஸ்-ஐ பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டார்.
ஜாக்கஸ் காலிஸ்-ஐ பார்த்தவுடன் உங்கள் கால்களை தொடலாமா? என கேட்டு காலில் விழுந்து வணங்கினார் அர்ஷின் குல்கர்னி. பின்னர் எப்படி 12 ஆண்டுகளாக காலிஸ் போல வர வேண்டும் என நினைத்ததை அவருடன் பகிர்ந்து கொண்டார். மேலும், 8 ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை காலிஸ்-ஐ ஒரு கிரிக்கெட் போட்டியில் சந்தித்து ஆட்டோகிராப் வாங்கியதை நினைவு கூர்ந்து அவரிடம் காட்டினார் அர்ஷின்.
இந்த சம்பவம் அர்ஷின் மற்றும் ஜாக்கஸ் காலிஸ் என இருவருக்கும் நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது. காலிஸ் போன்ற ஒரு சிறந்த ஆல் - ரவுண்டரை இந்த கிரிக்கெட் உலகம் மீண்டும் சந்திக்குமா? என்ற கேள்விக்கு விடையாக அர்ஷின் குல்கர்னி இருப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் கூடவே எழுந்துள்ளது.