மொஹாலி: இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடவுள்ள மொஹாலி மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்து பார்க்கலாம்.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. மொஹாலி மைதானத்தில் நடக்கவுள்ள முதல் டி20 போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் தீவிரமாக இருக்கின்றனர். இந்த தொடருக்காக 14 மாதங்களுக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய டி20 அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளனர்.

ஆனால் சொந்த காரணங்களால் முதல் டி20 போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் கானும் காயம் காரணமாக டி20 தொடரில் இருந்தே விலகியுள்ளார். இருப்பினும் உலகக்கோப்பை தொடரை போல் ஆஃப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த வீரர்களுடன் களமிறங்க உள்ளது.
இந்த நிலையில் மொஹாலி மைதானத்தின் தன்மை குறித்து பார்க்கலாம். அதிக பவுண்டரி தூரத்தை கொண்டுள்ள மொஹாலி மைதானம், எப்போதும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இந்த மைதானத்தில் சராசரி ஸ்கோராக 183 ரன்கள் உள்ளது. இதன் மூலமாகவே மொஹாலி மைதானத்தின் பிட்ச்சில் தார் ரோடை போல் தாராளமான ரன்களை குவிக்க முடியும்.
முதலில் பேட்டிங் செய்யும் அணிகளை விடவும் சேஸிங் செய்யும் அணிகளுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். இதுவரை நடைபெற்றுள்ள 6 டி20 போட்டிகளில் 4ல் சேஸிங் செய்த அணிகளும், 2ல் முதல் பேட்டிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. குறைந்தபட்சமாக 180 ரன்களை சேர்த்தால் தான் டிஃபென்ஸ் செய்ய முடியும்.
கடந்த ஐபிஎல் தொடரின் போது மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனான தவானிடம் டாஸ் வென்ற பின் மும்பை கேப்டன் ரோகித் சர்மா என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, உடனடியாக பவுலிங்கை தேர்வு செய் என்று ஓபனாக அட்வைஸ் செய்தார். இதனால் மொஹாலி மைதானத்தில் டாஸ் வெல்லும் அணிகள் கண்ணை மூடி கொண்டு சேஸிங்கை தேர்வு செய்யலாம்.
அதுமட்டுமல்லாமல் மழை காலம் என்பதால், பனிப்பொழிவு நிச்சயம் இருக்கும். இதனால் பவுலர்கள் பந்துவீச அதீக கஷ்டங்களை சந்திக்க நேரிடும். இந்த மைதானத்தில் முதல் சில ஓவர்கள் வேகப்பந்துவீச்சுக்கும், அதன்பின் சுழற்பந்துவீச்சிற்கும் சாதகமாக இருக்கும். வானிலையை பொறுத்தவரை மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.