பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டது ஆர்சிபி அணி. ஆனால் ஆர் சி பி அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. இதற்குக் காரணம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தின் ஆடுகளம் தான் என்று பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் பெங்களூர் சின்னசாமி மைதானம் எவ்வளவு நெருக்கடியை ஒரு அணிக்கு கொடுக்கும் என்பதை நேற்றைய இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங்கின் அபார ஆட்டத்தால் 212 ரன்கள் வரை குவித்தது. இதை பார்க்கும் போது ஒரு அணி நான்கு விக்கெட்டுகளை விரைவில் இழந்தால் கூட அதிரடியாக ஆடினால் 200 ரன்களுக்கு மேல் சின்னசாமி மைதானத்தில் குவிக்கலாம் என்பதை காட்டுகிறது.
இதேபோன்று நீங்கள் 200 ரன்களுக்கு மேல் குவித்தால் கூட எப்பேர்ப்பட்ட பந்துவீச்சாக இருந்தாலும் உங்களால் தைரியமாக பில்டிங் செய்து வெற்றி பெற முடியாது என்பதை ஆப்கானிஸ்தானின் சேசிங் காட்டி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஓவர் வைத்தும் அதில் முதல் சூப்பர் ஓவர் டையில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் எவ்வளவு நெருக்கடிகளை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஆகியோர் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் எதிர்கொண்டு இருப்பார்கள் என்பதை நேற்று பார்த்த ரசிகர்களுக்கு நிச்சயம் புரிந்து இருக்கும். ஒரு போட்டியில் விளையாடுவதற்கே பாதி உயிர் சென்ற நிலையில் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ஒவ்வொரு சீசனிலும் ஏழு போட்டிகளை அங்கு தான் விளையாடி பல இன்னல்களை சந்தித்து வருகிறது.
ஆர் சி பி அணியில் பல திறமையான வீரர்கள் இருந்தும் ஆடுகளம் சிமெண்ட் சாலை போல் இருப்பதால்தான் அவர்களால் ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆர் சி பி அணிக்கு கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.