பெங்களூரு: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி மாற்று கேப்டனாக விராட் கோலி களமிறங்கிய சம்பவம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. ஏற்கனவே டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், சில வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில், ரோகித் சர்மா - ரிங்கு சிங் இருவரும் இணைந்து இந்திய அணியை மீட்டனர். இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது.
சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 69 பந்துகளில் 8 சிக்ஸ், 11 ஃபோர்ஸ் உட்பட 121 ரன்களை விளாசி அசத்தினார். அதேபோல் இளம் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் 39 பந்துகளில் 6 சிக்ஸ், 2 ஃபோர்ஸ் உட்பட 69 ரன்களை சேர்த்தார். இதையடுத்து இவர்கள் இருவரும் பெவிலியன் திரும்பிய போது பெங்களூரு ரசிகர்கள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று பாராட்டை தெரிவித்தனர்.
அதேபோல் முதல் ஓவரில் இருந்து பேட்டிங் செய்ததால் ரோகித் சர்மாவுக்கு சில நிமிடங்கள் ஓய்வு தேவைப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலியின் தலைமையில் இந்திய வீரர்கள் பவுலிங் செய்ய களமிறங்கினர். அதற்கு முன் வீரர்களுக்கு தெம்பூட்டும் வகையில் விராட் கோலி திட்டங்களை விளக்கி உணர்ச்சியூட்டும் வகையில் பேசினார்.
தொடர்ந்து முதல் 2 ஓவர்களுக்கு விராட் கோலி கேப்டன்சி செய்த நிலையில், 3வது ஓவருக்கு ரோகித் சர்மா இணைந்து கொண்டார். 2021 டி20 உலகக்கோப்பை தொடருடன் விராட் கோலி டி20 கேப்டன்சியில் இருந்து விலகி கொண்டார். அதற்கு பின் முதல்முறையாக மாற்று கேப்டனாக விராட் கோலி களமிறங்கியது பெங்களூரு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.