இந்தூர் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து களமிறங்கி உள்ளது. வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு கடைசி போட்டி இந்தியா பங்கேற்பது இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் டி20 உலக கோப்பைக்கு எந்த சுழற் பந்துவீச்சாளர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்காக இந்திய அணி வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஷ்ணாய் என்ற மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் ஜடேஜா இந்த தொடரில் களமிறங்கவில்லை ஜடேஜாவுக்கு தான் டி20 உலக கோப்பையில் முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜடேஜாவின் இடத்திற்கே ஆப்பு வைக்கும் வகையில் 29 வயதான அக்சர் பட்டேல் இருக்கிறார். கடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது அக்சர் பட்டேல் அணியில் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய முழு உடல் தகுதியை பெற்றுள்ள அக்சர் பட்டேல், தமக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நான்கு ஓவர்களை வீசி 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த நிலையில் தற்போது இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதிலும் அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்பட்டு நான்கு ஓவர்கள் வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் அக்சர் பட்டேல், பந்துவீச்சில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார்.
குறிப்பாக ஆடுகளம் பனிப்பொழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுழற்பந்து வீசுவது என்பது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கிறது. எனினும் அக்சர்பட்டேல் அதையெல்லாம் மீறி சிறப்பாக செயல்பட்டு இருப்பது t20 உலக கோப்பையில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்பதையே காட்டுகிறது.