இந்தூர்: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற இடதுகை பேட்ஸ்மேனாக மட்டும் இருந்தால் போதாது என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
அண்மை காலமாக இந்திய டி20 அணியில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகளவில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணியின் தோல்விக்கு, இந்திய பேட்டிங் வரிசையில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாததும் முக்கிய காரணமாகும்.

ஜடேஜா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மட்டுமே இடதுகை பேட்ஸ்மேன்களாக இருந்து வந்தனர். அதிலும் இஷான் கிஷனுக்கு இந்திய பிளேயிங் லெவனில் நிரந்தர வாய்ப்பும் இதுவரை வழங்கப்படவில்லை. இதன்பின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே என்று 6 இடதுகை பேட்ஸ்மேன்களை அணிக்குள் கொண்டு வந்தது பிசிசிஐ.
அதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எந்த அணியாக இருந்தாலும், எந்த மைதானமாக இருந்தாலும் அட்டாக்கிங் பாணியில் விளையாடி அசத்தி வருகிறார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல் ஃபினிஷிங் ரோலில் களமிறங்கி வரும் ரிங்கு சிங், அசாத்தியமான பல இன்னிங்ஸ்களை விளையாடி வருகிறார். அவர் விளையாடியுள்ள ஏராளமான இன்னிங்ஸ்களில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆட்டத்தை சிறப்பாக முடித்து வருகிறார். இதனால் இவர்கள் இருவரும் இந்திய பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்படுவது சந்தேகம் தான்.
ஆனால் இவர்களுக்கு இணையான வாய்ப்புகளை பெற்று வரும் திலக் வர்மா, எதிர்பார்த்த அளவிற்கு இதுவரை செயல்படவில்லை. அவ்வப்போது சில இன்னிங்ஸ்களை ஆடினாலும், அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க கூடிய இன்னிங்ஸை இதுவரை விளையாடவில்லை. இதனால் ஆஃப்கானிஸ்தான் அனிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் திலக் வர்மா நீக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதனிடையே இந்திய அணியின் இளம் இடதுகை பேட்ஸ்மேன்கள் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா உள்ளிட்ட வீரர்கள் தங்களின் திறமையை நிச்சயம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட வேண்டுமென்றால், திறமை மட்டும் போதாது. சீராக ரன்களை சேர்க்க வேண்டும். இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால் மட்டும் அவர்களை சேர்க்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.