பெங்களூரு: இந்திய அணியின் இளம் வீரரான ரிங்கு சிங்கின் பலம் அவருக்கு நன்றாக தெரியும் என்பதாலேயே அவர் பதற்றம் கொள்வதில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா பாராட்டியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 2வது சூப்பர் ஓவர் மூலம் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோகித் சர்மாவின் அபார சதம் காரணமாக 212 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி குல்புதீன் நைப்-ன் அதிரடியான ஆட்டம் காரணமாக 20 ஓவர்களில் 212 ரன்களை சேர்த்து சமன் செய்தது.

இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் ஆஃப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் சேர்த்த நிலையில், இந்திய அணியும் 16 ரன்களை சேர்த்தது. இதனால் 2வது சூப்பர் ஓவருக்கு ஆட்டம் நகர்ந்தது. அதில் இந்திய அணி 11 ரன்கள் சேர்த்த நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 12 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
அதில் ரவி பிஷ்னாயை வைத்து ரோகித் சர்மா கொடுத்த ட்விஸ்டால், ஆஃப்கானிஸ்தான் அணி சிக்சர் அடிக்க முயற்சித்து 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மாவும், தொடர் நாயகனாக சிவம் துபேவும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், கடைசியாக டபுள் சூப்பர் ஓவர் கொண்ட டி20 போட்டி எப்போது நடந்தது என்று நினைவில் கூட இல்லை. ஒரேயொரு முறை ஐபிஎல் தொடரில் 3 முறை பேட்டிங் செய்தேன். இந்த போட்டியிஐ பொறுத்தவரை பார்ட்னர்ஷிப்பை உருவாக்குவது முக்கியமான ஒன்றாக இருந்தது. நானும், ரிங்கு சிங்கும் கவனத்தை வேறு எங்கும் வைக்காமல் ஆடினோம். இந்த ஆட்டம் எங்களுக்கு சிறப்பான ஒன்றாக அமைந்தது. நிச்சயம் எங்களுக்கு அழுத்தம் இருந்தததி ஒப்புக் கொள்ள வேண்டும்.
அதேபோல் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதுடன் அதிரடியாகவும் ஆட வேண்டும். கடந்த இரு டி20 தொடர்களிலும் ரிங்கு சிங் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்துவிட்டார். அவரின் பலம் என்னவென்பது அவருக்கு நன்றாக தெரிகிறது. அதனால் எந்த பதற்றமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார். அதேபோல் கீழ்நிலை பேட்டிங் வரிசையில் அப்படியான ஒரு வீரர் தேவை. ஐபிஎல் தொடர்களில் அவர் என்ன செய்துள்ளார் என்பதை அறிவோம். அதனை இந்திய அணிக்காகவும் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.