இந்தூர்: டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற ஆசையை இந்திய இளம் ஆல்ரவுண்டர் சிவம் துபே வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 ஆட்டம் இந்தூர் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ளது. முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் சிவம் துபேவின் அதிரடியான ஆட்டத்தால், 6 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. பவுலிங்கில் ஒரு விக்கெட்டும், பேட்டிங்கில் 60 ரன்களும் விளாசிய சிவம் துபே ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

இதன் மூலமாக இந்திய நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை சிவம் துபேவால் கட்டாயம் நிரப்ப முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளார். ஏனென்றால் உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப மற்ற வீரர்கள் இல்லாததால், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மொத்த திட்டத்தையும் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
இதேபோல் மீண்டும் ஹர்திக் பாண்டியா காயமடைந்தால், அந்த இடத்தில் சிவம் துபேவை ஆட வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இந்த நிலையில் 2வது டி20 போட்டியை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்து சிவம் துபே பேசுகையில், இந்திய அணிக்காக விளையாடும் அத்தனை வீரர்களுக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்ட்யும் என்ற ஆசை இருக்கும். எனது மனதிலும் அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தை பற்றி இப்போதே சிந்திக்க விரும்பவில்லை.

இப்போது 2வது டி20 போட்டியில் எப்படி விளையாட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. ஒரேயொரு போட்டியில் மட்டுமே கவனத்தை வைப்பது தான் எனது அணுகுமுறை. இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட போது கடினமாக இருந்தன. நமது எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஏதும் நடக்கவில்லை என்றால் கடினமாக இருக்கும். ஆனால் சில விஷயங்கள் நமது கைகளில் இல்லை. நான் வழக்கம் போல் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டேன். உடல் மற்றும் மன ரீதியாக சிறப்பாக இருக்க பயிற்சியை செய்தேன்.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை எத்தனை போட்டிகளில் நீங்கள் விளையாடுகிறீர்களோ, அவ்வளவு நல்லது. ஏனென்றால் நிறைய போட்டிகளில் விளையாடும் போது தான், ஒரு வீரராக அதிக பக்குவங்களை எட்டுவோம். அது ஒரு அணிக்கும், வீரருக்கும் எப்போதும் முக்கியம். அப்போது தான் அணியின் காம்பினேஷனையும் முடிவு செய்ய முடியும். அதேபோல் ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதில் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.