இந்தூர்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதோடு, டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னாய் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஃபரூக்கி வீசிய முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் ஜெய்ஸ்வால் - விராட் கோலி கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தது. 2வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், நவீன் உல் ஹக் பந்தில் விராட் கோலி 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சிவம் துபே கூட்டணி இணைந்து அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 69 ரன்களாக இருந்தது. இதன்பின் ஜெய்ஸ்வால் ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு சிக்ஸ் என்ற ரீதியில் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஆனால் சிவம் துபே அனுபவ வீரர் முகமது நபி பவுலிங்கில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அட்டாக்கை தொடங்கினார். அதன்பின் சிவம் துபேவை தடுக்க எந்த ஆஃப்கானிஸ்தான் பவுலராலும் முடியவில்லை. தொடர்ந்து நூர் அஹ்மத் வீசிய ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி அசத்தினார் ஜெய்ஸ்வால். சிறப்பாக ஆடிய அவர், 34 பந்துகளில் 6 சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதே ஓவரின் கடைசி பந்தில் ஜித்தேஷ் சர்மா டக் அவுட்டாகி வெளியேற, இந்திய அணி 13 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களை சேர்த்திருந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய சிவம் துபே 22 பந்துகளில் அரைசதம் அடிக்க, இறுதியாக ரிங்கு சிங்கும் - சிவம் துபேவும் இணைந்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர்.
15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 173 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய சிவம் துபே 32 பந்துகளில் 4 சிக்ஸ், 5 ஃபோர்ஸ் உட்பட 63 ரன்களும், ரிங்கு சிங் 9 பந்துகளில் 9 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலமாக இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.