இந்தூர் : ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் தொடங்கியுள்ளது. ஏற்கனவே மொஹாலியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி வென்றுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்துடன் ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியை பொறுத்தவரை முதல் டி20 போட்டியில் ஆடிய சுப்மன் கில் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, நட்சத்திர வீரரான விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தூர் மைதானம் அளவில் சிறியது என்பதால், பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும். அதிகளவில் பவுண்டரிகள் அடிக்க முடியும். இதனால் பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக பார்க்கப்படுகிறது.
இதனை மனதில் வைத்தே ரோகித் சர்மா சேஸிங்கை தேர்வு செய்துள்ளார். டாஸ் வென்ற பின் ரோகித் சர்மா பேசுகையில், பவுண்டரி எல்லை சிறியது என்பதால் சேஸிங்கை தேர்வு செய்கிறேன். முதல் டி20 போட்டியில் திட்டங்களை செயல்படுத்தியதை போல், 2வது டி20 போட்டியிலும் செயல்படுத்த விரும்புகிறேன். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ரோல் அளிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மைதானத்தில் சுதந்திரமாக விளையாடுவதற்காக தான் அனைத்து வகையிலும் ஆதரவு அளிக்கப்படுகிறது. நாங்கள் டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து செயல்பட்டு வருகிறோம். அதேபோல் இந்த டி20 போட்டிகளில் வெற்றிபெறுவதும் முக்கியமானது. சுப்மன் கில் மற்றும் திலக் வர்மா இருவரும் நீக்கப்பட்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரான் பேசுகையில், நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினோம்./ முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் அனைத்து வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த போட்டியை போல் அல்லாமல் சிறந்த தொடக்கத்தை அளிப்போம் என்று நினைக்கிறேன். ரஹ்மத் ஷாவிற்கு பதிலாக நூர் அஹ்மத் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.