பெங்களூரு: இந்திய அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே இருவருக்கும் பிசிசிஐ ஒப்பந்தம் வழங்கப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரு டி20 போட்டிகளிலும் அரைசதம் விளாசியதோடு, 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் சிவம் துபே. நம்பர் 4ல் களமிறங்கி ஸ்பின்னர்களை அநாயசமாக விளாசும் திறமையை கொண்டுள்ள சிவம் துபேவை சிஎஸ்கே அணியை தொடர்ந்து இந்திய அணியும் சிறப்பாக பயன்படுத்தி வருகிறது.

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிவம் துபே, பவுலிங்கில் 2 ஓவர்களை வீசும் அளவிற்கு திறமையை கொண்டுள்ளார். இதனால் இந்திய அணிக்கு 6வது பவுலராக சிவம் துபே நிச்சயம் இருப்பார் என்று ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கான மாற்று வீரராக சிவம் துபேவை உருவாக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் சிவம் துபே தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் வழங்கப்படும் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தில் இளம் வீரர்களான சிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரையும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதகா தகவல் வெளிவந்துள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தனது உறுதி செய்துள்ளார். அதேபோல் சிவம் துபே டி20 அணியில் நம்பிக்கையான வீரராக உருவாகியுள்ளார். பிசிசிஐ-ன் இந்த நடவடிக்கை ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்திய அணிக்காக நடராஜன் அடுத்தடுத்த தொடர்களில் விளையாடிய போது கூட அவருக்கு பிசிசிஐ ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.
ஆனால் நீண்ட ஆண்டுகளுக்கு பின் கம்பேக் கொடுத்துள்ள சிவம் துபேவுக்கு உடனடியாக ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளது. மும்பையை சேர்ந்த வீரர் என்பதால் சிவம் துபேவுக்கு உடனடியாக ஒப்பந்தம் வழங்க பிசிசிஐ முன் வந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ரசிகர்களும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.