மொஹாலி : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பந்து வீசிய இந்திய அணி ஆப்கானிஸ்தானை ஐந்து விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுக்க விட்டது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, மொகாலியில் கடும் குளிர் நிலவியது.

களத்தில் எங்களால் நிற்கவே முடியவில்லை.தற்போது எனக்கு சரியாகி விட்டது. பந்தை தொடக்கூட முடியவில்லை. பந்தை தொட்டால் கையே வீங்கி காயம் ஆகி விடுகிறது. இறுதியில் எங்களுக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. இந்த போட்டியின் மூலம் பல நல்ல விஷயங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த போட்டிக்கு தயாராக எங்களுக்கு நிறைய நேரம் இருந்தது.
எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தார்கள். இதேபோன்று வேகப்பந்து வீச்சாளர்களும் தங்களோடு பணியை சிறப்பாக மேற்கொண்டனர். ரன் அவுட் என்பது போட்டியின் ஒரு பகுதி தான். இந்திய அணிக்காக கடைசி வரை நின்று ரன் அடிக்க வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம்.ஆனால் நாம் நினைப்பது போல் எதுவுமே நடக்காது.
நான் தனிப்பட்ட முறையில் கில் கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என நினைக்கிறேன். இருப்பினும் பல நல்ல விஷயங்கள் இன்றைய ஆட்டத்தில் நடந்திருக்கிறது. ஜித்தேஷ் சர்மா மற்றும் சிவம் துபே ஆகியோர் எல்லாம் பேட்டிங்கில் பட்டையை கிளப்பி விட்டார்கள். திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங், நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். நாங்கள் பல விஷயங்களை இந்த தொடரில் முயற்சி செய்து பார்க்க விரும்புகிறோம்.
குறிப்பாக எங்களுடைய பவுலர்களை ஆட்டத்தில் பல சூழலுக்கு தகுந்தார் போல் பயன்படுத்தி அவர்களை கற்க விரும்புகிறோம். இன்றைய ஆட்டத்தில் கூட வாஷிங்டன் சுந்தர் 19-வது ஓவரில் வீசினார். எங்களுடைய வீரர்களுக்கு நாங்கள் கடும் சவால்களை கொடுக்க விரும்புகிறோம். அப்போதுதான் எங்கள் அடியில் இருக்கும் குறைகளை சரி செய்ய முடியும். உலகக் கோப்பைக்காக நாங்கள் என்னென்ன எல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்வோம். அதே சமயம் போட்டியில் வெற்றியும் பெற வேண்டும் அதுதான் மிகவும் முக்கியம் என்று ரோகித் சர்மா கூறினார்.