மும்பை : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் வரும் டி20 தொடரில் இதுவரை இந்தியா இரண்டு போட்டிகளில் ஆடி இருக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த டாஸ் முடிவைத்தான் சில ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தயார் ஆகி வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியா ஆடும் கடைசி டி20 தொடர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் இந்த தொடர்தான். இதன் பின் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரும், 2024 ஐபிஎல் தொடரும் நடைபெற உள்ளது. ஐபிஎல் முடிந்த உடன் டி20 உலகக்கோப்பை தொடங்க உள்ளது.
உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணி தன் கடைசி டி20 தொடரில் தனது பலவீனங்களை சரி செய்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதில் ஒரு பலவீனம் தான் முதலில் பேட்டிங் செய்வது. இந்திய டி20 அணி சேஸிங்கில் பலமான அணியாகவும், முதலில் பேட்டிங் செய்து பின் எதிரணியை கட்டுப்படுத்துவதில் பலவீனமான அணியாகவும் உள்ளது.

எனவே, ஆப்கானிஸ்தான் தொடரில் டாஸ் இரண்டு போட்டிகளிலாவது முதலில் பேட்டிங் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அப்படி செய்தால் தான் உலகக்கோப்பை தொடரில் திடீரென அரை இறுதி, இறுதியில் பெரிய அணிகளுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்ய வேண்டி வந்தால் தடுமாறாமல் முன் அனுபவத்தின் மூலம் முடிவுகளை எடுக்கலாம்.
ஆனால், ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அதற்கு காரணம், சேஸிங்கில் எளிதாக வெற்றி பெறலாம் என்பது தான். முதல் போட்டியில் அது சரியாக இருக்கலாம். ஆனால், இரண்டாவது போட்டியிலும் ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு வளர்ந்து வரும் அணியை எளிதாக வீழ்த்துவதில் குறியாக இருப்பது சரியா? என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இரண்டாவது போட்டியிலாவது சவாலை தாமே உருவாக்கி முதலில் பேட்டிங் இருக்க வேண்டும்.
இது குறித்து சிலர் வைக்கும் குற்றச்சாட்டும் முக்கியமானதாக உள்ளது. அதாவது, நீண்ட காலம் கழித்து ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு அணிக்கு எதிராக இந்தியா ஒரு போட்டியில் தோற்றால் கூட அவர்கள் இருவரையும் அணியை விட்டு நீக்க வேண்டும் என்ற அழுத்தம் ஏற்படும்.
அதை தவிர்க்கவே எளிதாக வெற்றி பெறும் பாதையை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தேர்வு செய்து வருகின்றனர் என்பதே அந்த குற்றச்சாட்டு. இந்தியா - ஆப்கானிஸ்தான் மூன்றாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா டாஸ் வென்றால் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை வைத்தே இந்த குற்றச்சாட்டு சரியா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.