அது அஸ்வின் லெவல் யோசனை.. அந்த வீரரின் முதிர்ச்சி ஆச்சரியமான ஒன்று.. ராகுல் டிராவிட் பேச்சு!
பெங்களூர்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரின் போது ரோகித் சர்மா திடீரென ஓட முடியாது என்பதை அறிந்து ரிட்டையர்ட் அவுட்டாகி வெளியேறிய சம்பவம் குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி டபுள் சூப்பர் ஓவர் மூலம் அசத்தல் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங்கின் அபார ஆட்டம் காரணமாக 212 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை எடுத்து சமன் செய்தது.

இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. அதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 16 ரன்கள் சேர்த்த நிலையில், பின்னர் களமிறங்கிய இந்திய அணியும் 16 ரன்களை சேர்த்தது. இதனால் ஆட்டம் 2வது சூப்பர் ஓவருக்கு நகர்ந்தது. அதில் இந்திய அணி 11 ரன்கள் சேர்த்த நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு 12 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
அதில் ரவி பிஷ்னாயை வைத்து ரோகித் சர்மா துணிந்து ரிஸ்க் எடுத்தார். அப்போது ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமது நபி மற்றும் குர்பாஸ் இருவரும் சிக்சர் அடிக்க முயற்சித்து 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் யோசனைகள் மற்றும் முடிவுகள் அபாரமாக இருந்தது. 2வது சூப்பர் ஓவரில் ரோகித் சர்மா பேட்டிங் செய்யலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தியதாகட்டும், கடைசி பந்தில் ரிங்கு சிங்கை ஓடுவதற்கான முடிவை எடுத்ததாகட்டும், பவுலர்களை தேர்வு செய்ததாகட்டும் டிராவிட்டின் முடிவுகள் அசத்தலாக அமைந்தது.
இந்த வெற்றி குறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், சூப்பர் ஓவரின் போது முகமது நபியின் காலில் பட்டு 3 ரன்கள் எடுக்கப்பட்டது கிரிக்கெட்டில் நடக்கும் ஒன்று தான். அதனை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். சில பரபரப்பான நேரங்களில் இப்படியான விஷயங்கள் நடக்கும் போது அந்த அணிக்கும், வீரர்களுக்கும் ஏமாற்றமாக இருக்கும். ஆனால் ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.
அதேபோல் ரோகித் சர்மா ரிட்டையர்ட் அவுட்டாகி வெளியேறியது அஸ்வினின் சிந்தனையை போன்று எடுக்கப்பட்ட முடிவு. அதேபோல் ரிங்கு சிங் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை கடந்த ஆண்டு தான் இந்திய அணிக்காக தொடங்கினார். அதற்குள் இவ்வளவு அமைதியும், முதிர்ச்சியையும் வெளிப்படுத்துவது ஆச்சரியமளிக்கிறது.
அவர் ஏற்கனவே சில போட்டிகளில் சிறப்பாக ஃபினிஷ் செய்திருந்தாலும், இந்த ஆட்டம் அவருக்கு மிகச்சிறந்த பரீட்சையாக அமைந்தது. ரிங்கு சிங்கிற்கு அவரின் பலம், பலவீனம் குறித்து நன்றாக தெரிகிறது. யாரை அட்டாக் செய்ய வேண்டும் என்ற தெளிவு உள்ளது. அதற்கேற்ப களத்திலும், களத்திற்கு வெளியிலும் செயல்பட்டு வருவதாக பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications