பெங்களூரு : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது t20 போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் அடித்து ஆட முற்பட்டு நான்கு ரன்களில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி கோல்டன் டக் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதேபோன்று சிஎஸ்கே அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் சிவம் துபே ஒரு ரன்னில் கேட்ச் ஆக இந்தியாவின் மானம் கப்பல் ஏறியது.

இதனை அடுத்து டி20 கிரிக்கெட்டில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தொடரில் கூட சஞ்சு சாம்சனுக்கு முன்னுரிமை வழங்காமல் ஜித்தேஷ் சர்மா என்ற இளம் வீரருக்கு தான் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் இரண்டு போட்டிகளும் சரியாக விளையாடவில்லை என்ற காரணத்தால் சஞ்சு சாம்சனுக்காவது வாய்ப்பு கொடுக்கலாம் என இந்திய அணி நிர்வாகமே முடிவெடுத்து வாய்ப்பு வழங்கியது.
இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் சஞ்சு சாம்சன் இன்றைய ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் அடித்து தன்னுடைய இடத்தை உறுதி செய்து கொள்வார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தாம் எதிர்கொண்ட முதல் பந்திலே முகமது நபியிடம் கேட்ச் ஆகி கோல்டன் டக் ஆனார். இதன் மூலம் இந்திய அணி 22 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
சஞ்சு சாம்சனுக்கு நீண்ட நாட்களாக வாய்ப்பு கிடைக்காமல் தற்போது தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சதம் அடித்த பிறகு டி20 தொடரிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் சரியாக அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் தற்போது கிடைத்த ஒரு வாய்ப்பையும் கோல்டன் டக் ஆகிவிட்டார். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என ரசிகர்கள் கோபப்படுவது வழக்கம். ஆனால் கிடைக்கும் வாய்ப்பை இப்படி வீணாக்குவது சஞ்சு சம்சன் மீது உள்ள பெரும் குறையாக பார்க்கப்படுகிறது.