இந்தூர்: ஆஃப்கானிஸ்தான் அணியின் முகமது நபி பவுலிங்கில் இந்திய அணியின் இளம் வீரர் சிவம் துபே ஹாட்ரிக் சிக்ஸ் அடித்துள்ள சம்பவம் இந்திய வீரர் வீரர்களையே பிரமிக்க வைத்துள்ளது.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் மற்றும் ரவி பிஷ்னாய் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஃபரூக்கி வீசிய முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் ஜெய்ஸ்வால் - விராட் கோலி கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தது. 2வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்ட நிலையில், நவீன் உல் ஹக் பந்தில் விராட் கோலி 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் இளம் வீரர்களாக ஜெய்ஸ்வால் - சிவம் துபே கூட்டணி இணைந்தது. சிவம் துபே தொடக்க பந்துகளை நிதானமாக விளையாட, மறுமுனையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். ஃபரூக்கி, நவீன் உல் ஹக் என்று யார் பந்துவீசினாலும் சிக்சரை விளாசி பொளந்து கட்டினார். சிறப்பாக ஆடிய அவர், 27 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
முகமது நபி வீசிய 10வது ஓவரின் முதல் பந்தில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடிக்க, பின்னர் சிவம் துபே அட்டாக்கில் வந்தார். முகமது நபி வீசிய 2வது பந்திலேயே லாங் ஆன் திசையில் சிக்சர் அடித்து அசத்தினார். அவர் அடித்த பந்து முதல் மாடிக்கு சென்று விழுந்தது. பின்னர் 3வது பந்தை டீ மிட் விக்கெட் திசையில் சிக்சர் அடிக்க, அந்த பந்து 2வது மாடிக்கு சென்று விழுந்தது. தொடர்ந்து 4வது பந்திலும் சிக்சர் அடித்து ஹாட்ரிக் சிக்சராக மாற்ற, அந்த பந்து 3வது மாடிக்கு சென்று விழுந்தது.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய சிவம் துபே 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அடுத்தடுத்து போட்டிகளில் அரைசதம் விளாசியுள்ள சிவம் துபே, ஹர்திக் பாண்டியாவுக்கு மிகச்சிறந்த போட்டியாளராக உருவாகியுள்ளார். ஸ்பின்னர்கள்ளை சிவம் துபே சிக்ஸ் அடிக்கும் திறன், பலரையும் பிரமிக்க வைத்துள்ளது. இதனால் இந்திய அணி வீரர்களும் பாராட்டினர்.