இந்தூர் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணி ஆப்கானிஸ்தான அணியை 172 ரன்களில் சுருட்டியது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 15 புள்ளி நான்கு ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து எட்டியது. இதனை அடுத்து பேட்டிங்கில் சிவம் துபே 32 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார்.

இந்த நிலையில் நடப்பு தொடரில் தொடர்ந்து இரண்டு முறை அரைசதம் அடித்து சிவம் துபே அசத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளிடம் பேசிய அவர் என்னுடைய செயல்பாடு நினைத்து எங்கள் அணி கேப்டன் மகிழ்ச்சி கொண்டார்.நன்றாக விளையாடினாய் என்று என்னை பாராட்டினார். நானும் ஜெய்ஸ்வாலும் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள்.
எங்களுக்கு எங்களுடைய ஆட்டம் குறித்து நன்றாகவே தெரியும். இந்திய டி20 அணியில் என்னுடைய பணி சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு அதிரடியாக விளையாட வேண்டும் என்பதுதான். இதுதான் எங்களுடைய திட்டம். நாங்கள் இருவருமே அதிரடியாக விளையாடி போட்டியை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக இந்த ஓவர்களில் முடித்து விட வேண்டும் என்ற டார்கெட் வைத்துக் கொண்டு விளையாடவில்லை .
20 ஓவருக்கும் முன்பே போட்டியை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அதிரடியாக விளையாடினோம். கடந்த 14 மாதங்களாக கிரிக்கெட்டில் பல விஷயங்கள் குறித்து நான் உழைத்து வருகிறேன். பேட்டிங் பந்துவீச்சு திறமை இவை இரண்டை காட்டிலும் மனதளவில் நான் பல விஷயங்களை மாற்றிக் கொண்டிருக்கிறேன். டி 20 போட்டி பொருத்தவரை மனதளவில் நாம் தயாராக இருக்க வேண்டும் நெருக்கடியை எப்படி சமாளிப்பது? எந்த பவுலர்களை குறி வைத்து அடிப்பது என்பது குறித்து எல்லாம் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அனைத்து பந்துகளையும் அடித்து ஆட வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னுடைய பந்துவீச்சிலும் நான் கவனம் செலுத்தி வருகிறேன். முதல் போட்டியில் நான் நன்றாக பந்து வீசினேன். இரண்டாவது டி20 போட்டியில் இன்னும் நான் கூடுதலாக கவனம் செலுத்தி ரன்களை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். இருப்பினும் டி20 கிரிக்கெட் என்பது இப்படித்தான் செயல்படும். ஒரு நாள் என்னுடைய நாளாக இருக்கும். மற்றொரு நாள் என்னால் சிறப்பாக விளையாட முடியாமல் போகலாம்.