இந்தூர்: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டிக்காக நட்சத்திர வீரர் விராட் கோலி இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியை தொடங்கியுள்ளார்.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடக்கவுள்ளது. மொஹாலியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய சிவம் துபே அரைசதம் அடித்ததோடு கடைசி வரை நின்று ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.

இதையடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்தூர் மைதானத்திற்கு பயணித்தது. நேற்று காலையில் இந்தூர் மைதானத்திற்கு இந்திய அணி வந்தடைந்த சூழலில், விராட் கோலி நேற்றிரவு மாலை மும்பையில் இருந்து இந்தூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தனது மகளின் பிறந்தநாள் காரணமாக முதல் டி20 போட்டியில் விராட் கோலி பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் 2வது டி20 போட்டியில் விராட் கோலி பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இந்தூரில் இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட நிலையில், அவர்களுடன் விராட் கோலியும் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பின் இந்திய டி20 அணிக்கு நட்சத்திர வீரர் விராட் கோலி மீண்டும் திரும்பியுள்ளார். கடைசியாக 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடி இருந்தார்.
நடப்பாண்டில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ளார். இதன் மூலம் டி20 உலகக்கோப்பையில் விளையாட விராட் கோலி ஆர்வமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் விராட் கோலி ஆர்சிபி அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி வருகிறார். அவரும் ரோகித் சர்மாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினால் இந்திய அணி கூடுதல் பலம்பெறும் என்று பார்க்கப்படுகிறது. இருப்பினும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் - ரோகித் சர்மா முடிவு என்ன என்பது நாளைய ஆட்டத்தில் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.