பெங்களூரு : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது t20 போட்டியில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு இரண்டு சூப்பர் ஓவர் முடிவில் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் ரோகித் சர்மாவின் பேட்டிங் மட்டுமல்லாமல் கேப்டன்சி ஸ்டைல் தான் ஆப்கானிஸ்தானை திக்கு முக்காட வைத்தது.
முதல் சூப்பர் ஓவர் முடிவில் மீண்டும் இரண்டு அணிகளுமே 16 ரன்கள் எடுத்து ஆட்டம் மீண்டும் டை ஆனது. இதனை அடுத்து இரண்டாவது சூப்பர் ஓவர் நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 11 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் களமிறங்கினர். அப்போது எந்த வீரர் பந்து வீசப் போகிறார் என்பதை பார்த்து தங்களுடைய பேட்ஸ்மேன்களை முடிவு செய்யலாம் என ஆப்கானிஸ்தான் நினைத்தது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்கை செய்தார். அதன்படி சூப்பர் ஓவரை யார் வீசப் போகிறார் என்பதை கடைசி வரை அவர் தெரிவிக்கவில்லை.
அதற்கு பதிலாக ஆவேஷ் கான் மற்றும் ரவி பிஸ்னாய் ஆகிய இருவரையும் பந்து வீச தயார் படுத்துமாறு ரோகித் சர்மா கூறினார். இதனை அடுத்து இருவருமே தங்களுடைய வார்ம் அப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனால் சுழற் பந்துவீச்சாளர் சூப்பர் ஓவரை வீசப் போகிறாரா இல்லை வேகப்பந்துவீச்சாளர் வீசப் போகிறாரா என்ற குழப்பத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் இருந்தனர்.
கடைசி வரை இந்த குழப்பத்தை ஆப்கானிஸ்தானுக்கு ரோகித் சர்மா கொடுத்தார். இதனை அடுத்து முகமது நபி பேட்டிங் செய்ய வந்தவுடன் யாருமே எடுக்க பயப்படும் முடிவாக சுழற் பந்துவீச்சாளரை சூப்பர் ஓவர் வீச ரோகித் சர்மா அழைத்தார். ரன் குவிப்புக்கு சாதகமான பெங்களூர் மைதானத்தில் பொதுவாக சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த பலரும் தயங்குவார்கள்.
ஆனால் ரோகித் சர்மா வித்யாசமான முறையில் தைரியமாக சுழற் பந்துவீச்சாளரை பந்து வீச அழைத்தார். பின்னர் பாலை எளிதாக சிக்ஸர் அடித்து விடலாம் என்று எண்ணி ஆப்கானிஸ்தான் வீரர்களும் அடித்து ஆட முற்பட்டு கேட்ச் ஆனார்கள். இதன் மூலம் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. நேற்று ஆட்டத்தில் ரோகித் சர்மா செய்த இந்த புத்திசாலித்தனம் தான் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.