மும்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் வெறும் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14 மாதங்களுக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். அதேபோல் சஞ்சு சாம்சன், சிவம் துபே, அக்சர் படேல் உள்ளிட்டோரும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் தந்தையின் உடல்நிலை பிரச்சனை காரணமாக தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் இளம் வீரர் தீபக் சஹர் பங்கேற்கவில்லை. இந்த தொடருக்கும் அவர் திரும்பவில்லை. இந்த நிலையில் ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணி வெறும் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்ட அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கடந்து மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் யாரென்று பார்த்தால், சிவம் துபே மட்டுமே இருக்கிறார். 3 டி20 போட்டிகளில் ஒரு போட்டியில் ஏதாவது ஒரு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தசைபிடிப்பு ஏற்பட்டாலும் ரோகித் சர்மாவின் பாடு திண்டாட்டம் தான்.
ஆனால் மாறாக ரவி பிஷ்னாய், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என்று 4 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பும்ரா மற்றும் சிராஜ் இருவருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் நெருங்கியுள்ளதால் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிரசித் கிருஷ்ணாவை தேர்வு செய்து குறைந்தபட்சம் பேக் அப் வீரராக விளையாட வைத்திருக்கலாம்.
இதனால் அணித் தேர்வில் பிசிசிஐ பல்வேறு குளறுபடிகளை செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 4 ஸ்பின்னர்களை எடுத்ததற்கு பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளரை தேர்வு செய்து தயார் செய்திருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல், நீக்கப்பட்ட வீரர்கள் என்ன காரணத்திற்காக நீக்கப்பட்டார்கள் என்ற விளக்கமும் பிசிசிஐ அளிக்காதது பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.