மும்பை: 14 மாதங்களுக்கு பின் இந்திய டி20 அணிக்கு மீண்டும் கேப்டனாக ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் தேர்வு செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்ற போது, இது இளம் வீரர்களுக்கானது. நாங்கள் விலகி கொள்கிறோம் என்று சச்சின் டெண்டுல்கர், கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் மூவரும் விலகி கொண்டனர். இதனால் தோனி தலைமையில் சென்ற இந்திய அணி சென்று, யாரும் எதிர்பார்க்காத வகையில் கோப்பையை வென்றது.

அதன்பின் டி20 கிரிக்கெட்டில் ஒருமுறை கூட இந்திய அணியால் உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை. கடந்த டி20 உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்கு பின் பிசிசிஐ புதிய ரூட்டில் பயணித்தது. இங்கிலாந்து அணியின் பாணியை பின்பற்றி இளம் கேப்டனான ஹர்திக் பாண்டியா தலைமையில் ஒரு அணியை உருவாக்கியது.
விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் என்று சீனியர் வீரர்கள் யாரும் டி20 போட்டிகள் பக்கமே வரவில்லை. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற காட்சிகள் ஒட்டுமொத்த இந்திய டி20 அணியையும் ஒரு உலுக்கி உலுக்கிவிட்டது. ஐபிஎல் தொடரின் தாக்கம் இந்திய அணிக்குள்ளும் மாற்றங்களை செய்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
திடீரென ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்க, இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போதே ரோகித் சர்மா ஐபிஎல் கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு ரோகித் சர்மா தரப்பில் ஹர்திக் பாண்டியாவுக்கு இதுவரை எந்த வாழ்த்தும் கூறவில்லை. இதனிடையே திடீரென டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் விளையாட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஆர்வம் காட்டியுள்ளனர்.
அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடர் முதல்முறையாக அமெரிக்காவில் நடத்தப்படவுள்ளதால், இந்திய அணி ஸ்டார் வீரர்கள் இல்லாமல் பயணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. டி20 உலகக்கோப்பைக்கான போஸ்டர் பாயாக விராட் கோலி அமெரிக்காவில் கொண்டாடப்பட்டு வருவதால், பிசிசிஐ வியாபாரத்தையும் மனதில் வைத்து சில முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதாக ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் கடந்த 14 மாதங்களாக இந்திய அணிக்காக ஆடி வந்த சுப்மன் கில், இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், சாஹல் உள்ளிட்டோர் பிளேயிங் லெவனில் தங்களுக்கு இடமிருக்கிறதா என்று குழப்பத்தை இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பிசிசிஐ சீனியர் வீரர்களை டி20 தொடருக்கு சேர்க்காமல் தவிர்த்திருக்க வேண்டும் என்று விமர்சகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.