மும்பை: ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து எந்த வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று அத்தனையும் சிறப்பாக இருந்தது. இருப்பினும் இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மாவின் பேட்டிங் மட்டும் ரசிகர்கள் மத்தியில் சில விமர்சனங்களை பெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் திலக் வர்மா 22 பந்துகளில் ஒரு சிக்ஸ், இரு பவுண்டரி உட்பட 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் இந்திய பேட்டிங் வரிசையில் நம்பர் 3ல் களமிறங்க வேண்டிய விராட் கோலி, மகளின் பிறந்தநாள் காரணமாக முதல் டி20 போட்டியில் இருந்து விலகினார். இதன் காரணமாகவே திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் கிடைத்த வாய்ப்பிலும் சொதப்பலான ஆட்டத்தை திலக் வர்மா வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறிய போது, திலக் வர்மா களத்தில் இருந்தார். அப்போது சிவம் துபே திடீரென நம்பர் 4ல் களமிறக்கப்பட்டார்.

சில ஓவர்கள் சிறப்பாக ஆடிய திலக் வர்மா, திடீரென ஒமர்சாய் பந்தில் சிக்சர் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். கிடைத்த வாய்ப்பை திலக் வர்மாவுக்கு முழுமையாக பயன்படுத்தி கொள்ள தெரியவில்லை. இதனால் திலக் வர்மா அடுத்த போட்டியில் இருப்பாரா என்ற சந்தேகம் உள்ளது. ஏனென்றால் விராட் கோலி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் அடுத்த போட்டிக்கு தயாராகிவிடுவார்கள்.
இதனால் இந்திய அணியில் யார் பெஞ்ச் செய்யப்படுவார்கள். சிவம் துபேவின் ஆட்டம் காரணமாக அவர் வெளியில் அமர வைக்கப்பட வாய்ப்பில்லை. அதேபோல் ரிங்கு சிங்கை யாரும் தொடவே மாட்டார்கள். அதனால் சுப்மன் கில் மற்றும் திலக் வர்மா இருவரும் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் ஜித்தேஷ் சர்மாவும் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசினார். எளிதாக பிரஷரை கையாண்டார். ஆனால் அவர் ஆட்டத்தை ஃபினிஷ் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.