மொஹாலி: ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணியில் இஷான் கிஷன் தேர்வு செய்யப்படாதது குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த தொடருக்கான அணி தேர்வில் இருந்தே சர்ச்சை தொடங்கியது. ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, இஷான் கிஷன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

அவர்களுக்கு பதிலாக விக்கெட் கீப்பர்களாக ஜித்தேஷ் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது பிசிசிஐ தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே காரணமாக பார்க்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின் ஸ்ரேயாஸ் ஐயர் உடனடியாக நாடு திரும்பி ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார்.
அதேபோல் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து மனசோர்வு காரணமாக இஷான் கிஷன் விலகினார். இதன்பின் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்று கூறிவிட்டு, துபாயில் முன்னாள் கேப்டன் தோனியுடன் இணைந்து பார்ட்டி கொண்டாடினார். இதனால் இஷான் கிஷன் மீது பிசிசிஐ அதிகாரிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியது.
இதனால் இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவே கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், இஷான் கிஷன் மீது யாருக்கும் எந்த அதிருப்தியும் இல்லை. அவர் ஆஃப்கானிஸ்தான் தொடரில் விளையாட முடியாது முன்னதாகவே விலகிவிட்டார். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போதே இஷான் கிஷன் விடுப்பு கேட்டார். அதற்கு அனைத்து ஆதரவாக நாங்கள் இருந்து வருகிறோம்.
ஆஃப்கானிஸ்தான் டி20 தொடரில் இருந்து விலகியது இஷான் கிஷன் தான். ஒருவேளை அவர் விடுப்பில் இருந்து மீண்டு வந்துவிட்டால், நிச்சயம் உள்ளூர் கிரிக்கெட்டை விளையாடி, இந்திய அணிக்கு விளையாட தயாராக இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் மீதும் எந்த ஒழுங்கு நடவடிக்கையெல்லாம் எடுக்கவில்லை. டி20 கிரிக்கெட்டில் ஏராளமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். அவர் தென்னாப்பிரிக்காவிலும் டி20 கிரிக்கெட் விளையாடவில்லையே என்று தெரிவித்தார்.